1 அக்டோபர், 2010

வெலிக்கடை சிறைக்கு பொன்சேகா மாற்றம்



கடற்படை தலைமையகத்தில் அதிகாரிகளின் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய அவருக்கு 30 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வழங்கியதை அடுத்தே நேற்றிரவு அவர் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் முன்வாயிலில் சரத்பொன்சேகாவின் மனைவி, எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தமையினால் பின் கதவின் வழியாகவே அவர் நேற்றிரவு 11.05 மணியளவில் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைக்கு முன்பாக பெருந்திரளானோர் திரண்டிருந்தமையினால் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் பிரதான வீதியின் குறுக்காக பஸ்ஸொன்றை நிறுத்தியுள்ளனர். சற்று நேரத்தின் விசேட வாகனமொன்று சிறைச்சாலைக்குள் சென்றதாகவும் அந்த வாகனத்திலேயே அவர் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகாவிற்கு பாயும் தலையணையொன்றும் வழங்கப்பட்டதாகவும் அவருக்கென விசேட சிறைக்கூடமெதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகள் தொடர்பில் எதனையும் தற்போதைக்கு குறிப்பிடமுடியாதுள்ளது என்றும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக