28 அக்டோபர், 2010

சந்திரிகா குமாரதுங்க மீதான தற்கொலை தாக்குதல் :எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கில் பிரதான எதிரியான வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. ரி.எம். பி.டி. வராவெல இந்தத் தீர்ப்பினை நேற்று வழங்கினார்.

கொழும்பு நகரசபை மைதானத்தில் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சந்திரிகா குமாரதுங்க காயமடைந்ததுடன் 27 பேர் கொல்லப்பட்டும், மேலும் 80 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேல் இலங்கேஸ்வரன் மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வருடங்களாக விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் போது எதிரி குற்றத்தினை ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் எதிரி மீது 28 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து எதிரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டணை விதிக்கப்பட்டது. சம்பவத்தின் போது தற்கொலை குண்டு தாக்குதலினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவித்திருக்குமானால் ஜனாதிபதி தேர்தல் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். அத்துடன் குண்டை வெடிக்கவைத்து பலரின் உயிரை காவு கொண்டமைக்காகவே இந்தத் தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக