27 ஆகஸ்ட், 2010

யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை : ஜோன் ஹோம்ஸ்

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு ஐ.நா. முகங்கொடுக்க நேரிட்டதாக ஜோன் ஹோம்ஸ் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை ஐ.நா. வகித்து வந்தது.

யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரசாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோதெல்லாம் ஐ.நா.கடும் அழுத்தங்களுக்குட்படநேர்ந்தது.

இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் ஐ.நா. தனது மனிதாபிமான பணியைச் சீராகவே செய்ய முடிந்தது. எனினும் பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படாமலே இருக்கின்றது.

யுத்தத்தின்போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று. மூதூரில் ஏ.சி.எப். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக