19 ஜூன், 2010

யுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்ச்சி இந்த நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு - ஜனாதிபதி

வட க்கு மக் களின் பிரச்சினைகளுக்கு வருட இறுதிக்குள் தீர்வு
எமது மக்களின் பிரச்சினை வெளியாருக்கு சுமையாகக் கூடாது
பயங்கரவாதத்திற்கு துணைபோகும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலி



யுத்த வெற்றியின் மூலம் கூடுதலாக மகிழ்ச்சியடையும் மக்கள் பிரிவினராக வடபகுதி மக்கள் இருக்கும் நிலையை உருவாக்குவதே தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படு மென்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடையதாக இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழும் எவருடைய பிரச்சினையும் வெளியில் உள்ளவருக்கு சுமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நமது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நமது பொறுப்பாகுமென்றும் சொன்னார். யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு காலி முகத்திடலில் நேற்றுக் காலை (18) நடைபெற்ற தேசிய வெற்றி அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.

பிரதமர் டி.எம்.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிக் கொடுத்து உதவிபெறுகின்ற நிலைக்குச் செல்லத் தயாரில்லையென்றும் உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை அச்சுறுத்திய யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அனுதாபம் செலுத்தும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வெளிநாடுகளில் இருந்து உதவியளிப்பவர்களின் செயற்பாடுகள் வடக்கு மக்களை மீண்டும் முகாமுக்குள் அனுப்புவதாகவே அமையும், எனக் குறிப்பிட்டார்.

‘நமக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் யுத்தம் செய்ததைப் போன்று, நாட்டைக் கட்டியெழுப்பும் போது ‘நாட்டுக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, முப்படையினரைப் போன்று அரச துறையில் உள்ள ஆறு மடங்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கையை ஆசியாவிலேயே அற்புதநாடாக மாற்றியமைக்க முடியுமெனத் தெரிவித்தார்.

“சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது நான்கு வருடங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பாதுகாக்கும் பெரும் சவாலை இந்த நாட்டு மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை, யுத்தத்தில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி அந்த வெற்றியை மலினப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் மிகப் பெரும் மனிதாபிமான நடவடிக்கைக் காக உயிர்த்தியாகம் செய்த படையினர், வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த மக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டமை அவர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அவமானமாகுமென்றும் கூறினார். “பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றியிலிருந்து சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறு எங்கே விடப்பட்டது என்பதையும் அவை எண்ணிபார்க்க வேண்டும்.

வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எல்லா நிதியும் பிரிவினை வாதிகள் நலன்களுக்காகவும் வடக்கு மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மீண்டும் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க உதவியளித்தால், மக்களை மீண்டும் முகாம்களுக்குள் தள்ளுவதாகவே அமையும்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டு மக்களிடம் சக்தியும் தைரியமும் உள்ளதாகவும் அதற்கான விருப்பமும் மனோதிடமுமே தேவையாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டை விடுவிப்பதற்காகப் படையினர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்காகவும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்காகவும் தேசத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக