15 ஜூன், 2010

வடக்கு மீனவர் மேம்பாட்டுக்கு ரூ.550 இலட்சம் இலகு கடன் 70 பேருக்கு முதற்கட்டமாக நேற்று வழங்கி வைப்பு

வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 550 இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் இலகு கடனாக வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மீனவர்களில் 70 பேருக்கு நேற்று முதற்கட்டமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களின் மீனவர்களின் நலனை கருத்திற் கொண்டு இலங்கை வங்கியின் ஊடாக இலகு கடன் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன யாழ்.குருநகரில் நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மீனவர்களுக்கான இலகுக் கடனை வழங்கி வைத்தார்.

தலா 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 4 இலட்சம் ரூபா வரையான தொகை அந்தந்த மீனவர்களின் தேவைக்கமைய வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள இடம்பெயர்ந்த மீனவர்களில் 160 மீனவர்கள் இந்த இலகுக் கடன் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இவர்களில் 70 மீனவர்களுக்கே நேற்று முதற்கட்டமாக வழங்கப்பட்டது என்றார்.

வலை, மீன்பிடி உபரகணங்கள் போன்றவற்றிற்கு அவர்கள் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளனர். இந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு முதல் வருடம் கொடுக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து எந்த அறவீடும் அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் 32 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட மாவட்ட மீனவ அபிவிருத்தி திணைக்கள கட்டடத்தை அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று திறந்து வைத்தனர்.

சகல நவீன வசதிகளையும் கொண்டதாக இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உட்பட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக