7 ஏப்ரல், 2010

தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு





இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மாத்தலை மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா போட்டியிடுகிறார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளார்.

இதனால் அவருக்காக அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். நேற்று ஜெயசூர்யாவின் பிரத்யேக செயலாளர் தலைமையில் தேர்தல் பிரசாரம் நடந்தது.

ஒரு இடத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மற்றொரு இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் ஜெயசூர்யா ஆதரவாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஜெயசூர்யாவின் பிரத்யேக செயலாளர் நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயசூர்யா அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது சென்னையில் உள்ள அவர், போனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார். அதன்பேரில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக