16 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டியில் தாக்குதல் சம்பவம் : படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில்

நாவலப்பிட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆதரவாளர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் குழுவொன்று தாக்கியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத்தாக்குதல் சம்பவம் நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான பாதையில் கிறின்வூட் மற்றும் போஹில் தோட்டப்பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் முரளிநாதன் கருத்துத்தெரிவிக்கையில் :

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக எமது பிரசாரக்குழுவினர் கிறின்வூட் ,போஹில் தோட்டப்பகுதிகளுக்குச் சென்றபோது அங்கு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களான காமினிஹொட்டியாராச்சி மற்றும் மனோகணேசன் ஆகியோரின் குழுவினரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது தீடிரென வந்த குழுவொன்று எம்மைத்தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எமது வாகனமொன்று அடித்து நொருக்கப்பட்டதோடு எமது ஆதரவாளர்கள் இருவர் படுகாயத்துக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். பாடுகாயமடைந்த எமது ஆதரவாளர்கள் இருவர் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தேர்தல் திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக