26 மார்ச், 2010

காசைக் 'கரி'யாக்கும் தேர்தல் ' வேட்டு'க்கள்!



தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வருகின்றது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில், தாம் தான் வெல்லப் போகின்றோம் என்று ஒவ்வொரு வேட்பாளரும் தமது பிரசாரக் கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. அதுவும் சாதாரண முழக்கம் அல்ல... செவிடு அதிரும்படியான முழக்கம்...

தேர்தல் வேட்பாளர்களின் அதிர்வேட்டு பிரசார முழக்கங்கள் தான் மக்களின் செவியை அதிர வைக்கின்றதென்றால், அவர்களை வரவேற்கும் ஆதரவாளர்கள் கொளுத்தும் பட்டாசுகளின் பேரிரைச்சலோ சொல்லி மாளாதது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஆரவாரமாகக் கலந்து கொள்கின்றார்களோ இல்லையோ அவ்வப்பகுதியை அதிர வைக்கும் வேட்டுக்களுக்கு மட்டும் குறையே இருப்பதில்லை.

நேற்று கொழும்பு நகரின் பிரதான வீதி ஒன்றில், இரு பிரதான கட்சிகளினதும் கூட்டங்கள் நடைபெற்றன. அச்சமயம் கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் சத்தத்தால் அப்பகுதியே அதிர்ந்தது... நடுநடுங்கியது....

அந்தத் தெருவே புகைமூட்டத்தில் மூழ்கியது. பட்டாசுகளின் துகள்கள் தெருவையே நிறைத்தன. எத்தனையோ அடி நீளத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கிடையே முக்கோண வெடிகள் வேறு.... அதிர்வுக்குக் கேட்கவா வேண்டும்?

இதில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், ஒரு தரப்பு வெடிக்கும் பட்டாசுகளை விட மற்றத் தரப்பு போட்டிப் போட்டுக் கொண்டு வெடிக்க வைப்பதுதான். ஆளும் கட்சிக்காரர் ஒரு கட்டு வெடி என்றால், 'உனக்கு நான் ஒன்றும் சளைத்தவனல்லன்' என்பதைப் போன்று எதிர்தரப்பு அதை விட மேலாக பட்டாசுகளை வெடிக்க வைப்பதுதான்....

காசைக் கரியாக்கி இப்படிப் போட்டிப் போட்டுக் கொண்டு பட்டாசுகளைக் கொளுத்தத்தான் வேண்டுமா? இதனால் யாருக்கு, என்ன லாபம்?

பட்டாசுகளுக்குச் செலவழிக்கும் லட்சக்கணக்கான பணத்தை ஏழை எளிய மக்களின் வாழ்வுக்காக, ஏன் வசதியற்ற பிள்ளைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்தலாமே...?

இத்தகைய வேட்டுக்கள், "இப்படிக் காசைக் கரியாக்குகிறார்களே" என்ற ஆதங்கத்தைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்துமே தவிர, போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கப் போவதில்லை... இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால், செவிடுபடும் மக்களின் காதுகளுக்காவது விடுதலை கிடைக்குமல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக