3 பிப்ரவரி, 2010



'ராணுவ புரட்சி செய்ய முயன்றேனா' : மறுக்கிறார் பொன்சேகா


கொழும்பு : "ராஜபக்ஷே அரசை கவிழ்க்க, ராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றதாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், ராணுவ முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா கூறியதாவது: என்னுடன் சேர்ந்து கொண்டு, ராணுவ புரட்சி நடத்தி ராஜபக்ஷே அரசை கவிழ்க்க முயற்சித்ததாக, 12 ராணுவ அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது, எனக்கு நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களை வைத்துக் கொண்டு, நான் எப்படி ராணுவ புரட்சியில் ஈடுபட முடியும். உண்மையில் எங்களின் பாதுகாப்பு கருதியே, தேர்தல் முடிவு வெளியான அன்று, ஓட்டலில் தங்கியிருந்தோம். இதை சதி ஆலோசனை என்று கூறியுள்ளனர். ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. எனக்கு 40 லட்சம் மக்கள் ஓட்டளித்துள்ளனர். எனவே, நாட்டை விட்டு ஒரு போதும் வெளியேற மாட்டேன்; நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் கதி என்ன?: இலங்கை அரசு மீது புகார்










வாஷிங்டன், ​​ பிப்.​ 2: இலங்கையில் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிட மறுத்து வருகிறது.​ அவர்களைப் பற்றிய தகவல்களை இலங்கை அரசு இருட்டடிப்புச் செய்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான "ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச்' புகார் கூறியுள்ளது.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி வருகிறது.

அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.

ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.​ இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது.​ மனித உரிமை ஆர்வலர்கள்,​​ மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள்,​​ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது.​ குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.​ அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.

அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.​ அவர்களில் பலரைக் காணவில்லை.​ அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தாலும் இலங்கை அரசு இதை பொருட்படுத்துவதில்லை.

தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை




சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின் அதன் விவரத்தை தலாய் லாமாவிடம் தெரிவிப்பதற்காக இமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் பிரதிநிதிகளுடன் திபெத் போட்டி அரசின் பிரதமர் சாம்தோங் ரின்போசே ​(நடுவில் இருப்பவர்)

பெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது அங்கு இருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் திபெத் நாட்டு ஆன்மிக தலைவர் தலாய் லாமா.​ அவர் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்பட்டு வருகிறார்.

திபெத்துக்கு சுயாட்சி கோரி தலாய் லாமா,​​ ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.​ இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் அரசுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.​ கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.​ தலாய் லாமா தரப்பில் சுயாட்சி கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.​ ஆனால் அதை சீனா நிராகரித்துவிட்டது.​ இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தலாய் லாமா வரும் 16-ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.​ அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்க ஒபாமா விருப்பமாக உள்ளார் என்று அமெரிக்கா சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.​ தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் இரு நாட்டுக்கும் இடையே மலர்ந்து வரும் நட்புறவில் கடும் விரிசல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.​ அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது.

தலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஹு ஜிண்டாவோ அமெரிக்கா செல்கிறார்.​ எனவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா விரும்பவில்லை.

ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா பிரச்னை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது.

தலாய் லாமா அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது தனது சுயாட்சி கோரிக்கைக்கு ஆதரவு தேடித்தான் என்று சீனா சந்தேகப்படுகிறது.

தலாய் லாமாவுடன் திபெத்தின் முக்கியத் தலைவர்கள் சிலர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்தப் பயணத்தின் போது அவர்கள் அதிபர் ஒபாமாவை சந்தித்து திபெத்தின் சுயாட்சி விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து சீன கம்யூனிஸ்ட் தலைவர்களும்,​​ தலாய் லாமாவின் பிரதிநிதிகளும் 2002-ல் இருந்து தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.​ எனினும்,​​ இந்த விவகாரத்தில் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக