20 ஜனவரி, 2010

மலையகத்தில் வன்முறையைத் தூண்டி
வாக்குகளைச் சூறையாட எதிர்க்கட்சிகள் சதி
- இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம் குற்றச்சாட்டு


மலையக மக்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்காக வன்முறையைத் தூண்டிவிட எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க உள்ளதால் அவர்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்யவும் எதிர்க்கட்சிகள் தயாராகுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சில பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி படித்தவர்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெல்லவைக்க வேண்டும் என்பதில் மலையக மக்கள் தெளிவாக உள்ளனர். இதனைத் தடுப்பதற்காக ஜே.வி.பி அடங்கலான எதிர்க்கட்சிகள் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இவற்றை முறியடிக்க நாம் சகல நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் கடைசி நேரத்தில் மக்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாக விழிப்பாக இருக்குமாறு நாம் மக்களை அறிவுறுத்தி வருகிறோம். மக்களின் அடையாள அட்டைகளைப் பறித்து அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதைத் தடுக்கும் சதி முறியடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வெளியார் மலையகத்திற்குள் புகுந்து இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுப்பது குறித்து மக்களை அறிவ+ட்டி வருகிறோம். அத்தகையோரை துரத்தியடிக்குமாறு கோரியுள்ளோம்” என்று கூறிய அவர் “ஒழுங்கான வழியில் மலையக மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது என்பதை உணர்ந்துள்ளதால் குறுக்குவழியில் அந்த வாக்குகளைக் கொள்ளையிட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.



வலி-வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில்
மீள்குடியேற பாதுகாப்பு அமைச்சு அனுமதி
-காணி உறுதிகளுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவிப்பு

யாழ்;ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக நீக்கி, அந்தக் காணிகளை உரிய பொதுமக்களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

வலி வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலய பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு வசதியாகவே பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

எனவே, குடியேற விரும்பும் காணி உரிமையாளர்கள், உறுதிப்படுத்துவதற்கான காணிக்குரிய ஆவணங்களுடன் வலி-வடக்கு, கோப்பாய் பிரதேச செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு:-

ஜே-221 - இளவாலை வடக்கு கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-222 - இளவாலை வடமேற்கு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி
ஜே-223 - விதக்புரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-224 - பன்னாலை கிராமசேவைப் பிரிவின் முழுமையாக
ஜே-225 - கொல்லங்கலட்டி கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-226 - நகுலேஸ்வரம் கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-228 - தெல்லிப்பளை கிராமசேவைப் பிரிவு ஒரு பகுதி
ஜே-229 - துர்க்காபுரம் கிராமசேவைப் பிரிவு முழுமையாக
ஜே-230 - தந்தை செல்வாபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-231 - மாவிட்டபுரம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-232 - மாவிட்டபுரம் தெற்கு கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி
ஜே-236 – பலாலி விடத்சாமம் கிராமசேவைப் பிரிவின் ஒரு பகுதி

கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு

ஜே-283 - இடைக்காடு கிராமசேவைப் பிரிவின் ஒருபகுதி
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும்
கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை
- சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை – அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச்சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுகின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம்.பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீளகுடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதியில் இருந்து சிங்களமக்கள் அழைத்து வரப்பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை.

20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். 1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச்சூழல் காணமாக இடம்பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

சட்டவிரோதமாக மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதுகுறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம்.

தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக