27 ஜனவரி, 2010

நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியாக மகிந்தா மீண்டும்-


நிறைவேற்று அதிகாரமுடைய 06வது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடந்துமுடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் 60,15,934 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தவகையில் அவர் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 57.88வீதம் வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா 41,73,185 வாக்குகளை பெற்றுள்ளார். இந்தவகையில் அவருக்கு 40.15சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நோக்கும்போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியினை ஈட்டியுள்ளதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சியும் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை தேர்தலில் மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 14,088,500 என்பதுடன் இவற்றுள் 10,495,451 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 10,3,93,613 வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் என்பதுடன் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,1838ஆகும். மகிந்த ராஜபக்ச அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை விட 18,42,749 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது வெற்றியானது நாட்டு மக்களின் வெற்றி-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச-


6வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்றரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருதவேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இத்தேர்தல் வெற்றியென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அணிதிரண்டு ஒன்றிணைய வேண்டியகாலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வாக்களித்தோருக்கும், வாக்காளிக்காதோருக்கும் தாமே ஜனாதிபதியெனவும், அனைத்து மக்களும் சட்டத்தின்முன் சமமானவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெம்பிலிகல குண்டுத் தாக்குதில் பௌத்த துறவியும் மற்றொருவரும் உயிரிழப்பு-

கம்பளை தெம்பிலிகல பிரதேசத்தில் இன்று 27ம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட 02பேர் உயிரிழந்துள்ளனர். கம்பளை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலவிலுள்ள பௌத்த விஹாரையின்மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த பௌத்தபிக்கு ஒருவரும் மேலுமொருவரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசரசிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவ்விருவரும் உயிரிழந்ததாக கம்பளை பொலிஸார் தெரித்துள்ளனர். இந்தத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் கம்பளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் அசாதாரண நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்றுநண்பகல் 12 மணியளவில் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் விசேட பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலீஸ் மாஅதிபருக்கும் பொது வேட்பாளர் கடிதம் அனுப்பிவைப்பு-


தனது உயிரின் பாதுகாப்புக்கும், சுதந்திரமான நடமாட்டத்துக்குமான பாதுகாப்பு சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு பொலீஸ் மாஅதிபருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தேர்தல்கள் ஆணையாளரைக் கடிதமொன்றின் மூலம் கேட்டுள்ளார். தான் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை விளக்கியே அவர் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தான் தங்கியிருக்கும் விடுதியைச் சூழ பெருமளவு படையினரும், பொலீஸ் அதிகாரிகளும் நின்றுகொண்டு அங்கு சென்றுவரும் அனைவரையும் சோதனையிடுவதுடன், தாம் வெளியில் செல்ல முடியாத விதத்தில் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னைக் கைதுசெய்ய அரசாங்கம் பிரயத்தனம் செய்வதாகவும், தான் தங்கியிருக்கும் விடுதிக்குள் படைவீரர்கள் உள்நுழைய முயல்வதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு ஆதரவு வழங்கிய பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினத்தில் தன்னைக் கைதுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய தான் கொழும்பிலுள்ள குறித்த தனியார் விடுதிக்கு சென்று தங்கியிருந்ததாகவும் அதன்பின் தாம் வெளியில்செல்ல முடியாதவிதத்தில் நேற்றிரவு 11மணியளவில் படைவீரர்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு சினமன் லேக் வியூ ஹோட்டலில் அவர் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக