17 டிசம்பர், 2009

ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர் மக்களும் வாக்களிக்க வழி வகுக்க வேண்டும் : No Image டேவிட் மிலிபாண்ட்


இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஓர் உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும், அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

"அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்மை சாதகமான முன்னேற்றம். இருந்தபோதிலும் மனிதநேயப் பணியாளர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று வரவும், முன்னாள் போராளிகளைச் சந்திக்கவும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேறும் வகையில் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வகையில் இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேரடியாக பிரிட்டிஷ் அரசு இணைந்து செயற்படும்.

நியாயமான முறையில் தேர்தல்கள்.....

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் சுதந்திரமாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பதற்குப் பங்காளிகளாக இருந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

இலங்கையில் உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எழுப்பியுள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள், அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்" என டேவிட் மிலிபாண்ட், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்


யாழ்ப்பாணத்தில் தொடர் மழையால் மக்கள் பெரும் பாதிப்பு




No Image
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலங்களில் உள்ளவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாவாந்துறை, குருநகர், காக்கைதீவு, பருத்தித்துறையின் சக்கோட்டை, வியாபாரி மூலை, பொலிகண்டி, அல்வாய் தும்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மழை வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடுப்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தேவாலயங்களிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

மழை நீர் வடியக் கூடிய வாய்க்கால் அமைப்பு இவ்விடங்களில் இல்லாததால், வெள்ளம் தேங்கி நிற்கின்றது. தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் அதிகரித்தே காண்ப்படுகிறது.

தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுவதால், சுகாதார வசதிகளும் இம்மக்களுக்குத் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் இன்றித் தவிக்கும் இம்மக்களை நேற்றுச் சந்தித்த சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிஸ்கட் பக்கட்டுக்கள் வழங்கினார்.

இவர்களுக்கான நிவாரண வசதிகளைச் செய்து கொடுப்பதில் அப்பிரதேச செயலர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். வீதிகளும் வெள்ளத்தினால் நிரம்பியிருப்பதால், போக்குவரத்து நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் குறைந்துள்ளன. பாரிய வாகனங்களின் வரவினால் சேதமடைந்திருந்த வீதிகளில் கிடங்குகள் காணப்படுகின்றன. பல இடங்களில் பாரவூர்திகள், பஸ்கள் இத்தகைய கிடங்குகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தின் வீதிகள் மோசமடைந்து காணப்படுகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மக்கள் தாமே வாய்க்கால்களை அமைத்து நீர் வடிந்தோடச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது

டெலோ`விலிருந்து சிவாஜி, ஸ்ரீகாந்தா விலகல்



No Image

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக