19 டிசம்பர், 2009

அன்னை மரியைத் தாங்கும் அதிசய கரங்கள்! : ஆனைக்கோட்டையில் சம்பவம்
No Image



ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது.

ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன் போது கண்டி தலதா மாளிகையில் 3000 மகாசங்க தேரர்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி செல்வ விநாயகர் ஆலயம், மற்றும் மீராம் முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய சமயத் தலங்களுக்கும் விஜயம் செய்தார்.

கண்டி ஆயர் டாக்டர் வியான பர்னாண்டோவிடமும் அங்குள்ள மற்றும் பல தேரர்களிடமும் நல்லாசி பெற்றார்


எதிரணி வேட்பாளர் மூலம் ஆட்சிபீடமேறி தனது கனவை நனவாக்க ரணில் முயற்சி- அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

No Image

மக்களின் ஆதரவினால் ஆட்சிக்கு வர முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிரணி வேட்பாளர் என்ற விடயம் ஊடாக ஆட்சிபீடமேறி தனது கனவை நனவாக்க முற்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். அதற்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி தக்க பதிலளிப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இராணுவம் தொடர்பிலõன எதிரணி வேட்பாளரின் கூற்று மற்றும் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறியதாக வார இறுதி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் எதிரணி தரப்பு அறிவிக்கவில்லை.

இதேவேளை, இந்தியாவுக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் இடம்பெர்ந்துள்ள தமிழ் மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2005ஆம் ஆண்டு தேர்தல் மற்றும் அதற்கு முன்னரான தேர்தல்கள் எவ்வாறு நடைபெற்றன என ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும். கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவருக்கு தெரியும். மேலும் அவர் கையெழுத்திட்ட போர்நிறுத்த உடன்படிக்கையினால் ஏற்பட்ட நிலைமையும் ஞாபகம் இருக்கும்.

எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் தெரிவித்துள்ளார். அதாவது, சரத் பொன்சேகா தனது கூற்றை மறுத்துள்ள நிலையிலும் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுவது ஏன்? இதுதான் பொது நோக்கமா? இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பில் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவிப்பர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

யுத்தம் நடைபெற்ற காலக்கட்டத்தில் சர்வதேச சக்திகள் மற்றும் உள்நாட்டின் சிலர் என பல சக்திகள் யுத்தத்தை நிறுத்த முயற்சித்தன. ஆனால், தற்போது அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, வேறு வழிகளில் பல முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாவிட்டால், தான் பதவியிலிருந்து விலகி விடுவதாக எதிரணி வேட்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், காபந்து அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஒருவேளை சரத் பொன்சேகா வெற்றி பெற்று பதவி விலக நேர்ந்தால் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பீடம் ஏறிவிடுவார். அப்போது எவ்வாறாவது புலிகளின் புதிய சக்திகளுடனாவது அவர் பயணிப்பார். இவ்வாறானதொரு நிலைமை தேவையா என்பதை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

பிரித்தானிய மாணவ விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய நடைமுறைகள்- பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
No Image

பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மாணவ விசா விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் அறிவிப்புச் செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

மாணவ விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தம்மை பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்ukstudent colombo@vifshelpline.com என்ற இணையத்தள முகவரியோடு தொடர்பு கொள்ள கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை www.vfusuklk.com என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம், வலிதான விசா ஏற்பு கடிதம் ஒன்று இருப்பவர்கள் மட்டுமே மேற்படி விசாவுக்கான விண்ணப்பங்களை இலத்திரனியல் அஞ்சல் மூலமாக அனுப்ப கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருவர் விண்ணப்பமொன்றுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது, அவரது முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொடர்பு இலக்கம் என்பவற்றை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

மேலும் தனது விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிக்கவுள்ள விண்ணப்பதாரியின் பெயரிலேயே பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தடவை வழங்கப்பட்ட விண்ணப்ப விபரங்களை மாற்றவோ, விண்ணப்பதாரிக்கு பதிலாக பிறிதொருவர் விசா விண்ணப்ப நிலையத்துக்கு ஆஜராகவோ முடியாது.

ஒருவர் ஒரு பதிவுக்காக ஒரு தடவை மட்டும் கோர முடியும். (பல தடவைகள் பதிவுக்கு கோருவதானது பதிவைப் பெற முடியாது போவதற்கு வழிவகுப்பதாக அமையும்)

விசா விண்ணப்ப நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலமோ அந்நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலமோ ஒருவர் தம்மை பதிவு செய்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் முன்பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது அதற்கான பதில் 3 வேலைநாட்களுக்குள் அவரை வந்தடையும். அவருக்கு முதலாவது சாத்தியமான பதிவு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், மாணவ விசா விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதும் விண்ணப்பதாரி பதிவின் பிரகாரம் விசா விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிப்பதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டிருப்பதும் அவசியமாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பப்படிவம், கடவுச் சீட்டு, விசா கட்டணம், ஏனைய தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் இலத்திரனியல் அஞ்சல் பிரதியொன்று என்பனவற்றை விண்ணப்பதாரி வைத்திருந்தால் மட்டுமே அவருக்கு விசா விண்ணப்ப நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த ஒழுங்கு முறைகளானது விசா சேவையை மேம்படுத்தவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பிரபாகரனின் மகளது சடலம் கண்டெடுக்கப்படவில்லை -இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்

No Image

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளது சடலத்தை தாங்கள் கண்டெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவம், துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்டதெனக் கூறி பெண் ஒருவரின் சடலத்தின் படம் ஒன்றை பிரபாகரனின் மகள் துவாரகாவினுடையதென சில இணையத் தளங்களில் காண்பிக்கப்படுவது பற்றிய உண்மைத் தன்மை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென கூறியுள்ளது.

மே மாதம் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலங்களில் எதுவும் துவாரகாவினுடையது என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் இணையத்தளங்களில் காண்பிக்கப்படுவதை ஒத்த சடலம் எதையும்கூட இராணுவம் அவற்றினுள் காணவில்லை என்றும் இராணு பேச்சாளர் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

இணையத்தளங்களில் துவாரகாவினுடையது எனக் காண்பிக்கப்படும் சடலம் வெறும் நிலத்தில் உள்ளாடையுடன் இறந்து கிடக்க காணப்படும் ஒரு பெண்ணின் சடலமாகும். துவாரகா உயிருடன் இருந்தபோது சல்வார் கமீஸ் அணிந்தபடி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் சடலத்தின் படத்திற்கு அருகில் காண்பிக்கப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதாக தெரிகின்ற போதிலும் இரண்டும் ஒருவருடையது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.



மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!


No Image

எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக