16 டிசம்பர், 2009




மட்டு. - கொழும்பு ரயில்சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும் : ரயிவே திணைக்க No Image ம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை காரணமாக தடைப்பட்டிருந்த மட்டக்களப்புக்கும் பிற இடங்களுக்குமிடையிலான ரயில் சேவை இன்றிரவு முதல் வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

சத்துருக்கொண்டானில் ரயில் பாதை வெள்ளத்தில் சேதமடைந்த நிலையில் நேற்று முன் தினமிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதையடுத்து குறிப்பிட்ட சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இதன் காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான ரயில் சேவை ஏறாவூர் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

வெள்ளத்தில் சேதடைந்த ரயில் பாதையைத் திருத்தும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால் இன்றிரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான ரயில் புறப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



ராஜரட்ணத்திற்கு எதிராக ஐ. அமெ. பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகைத் தாக்கல்


No Image


நிதி மோசடிகள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி ஆகியன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

அத்துடன், கெலியான் நிறுவனத்துடன் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஹெஜிங் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அந்தரங்க கொடுக்கல் வாங்கல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இது கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் பொலிஸார் ராஜ் ராஜரட்ணத்தைக் கைது செய்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கிணங்க அவரின் தொலைபேசி கலந்துரையாடல்களும் இரகசியமான முறையில் செவிமடுக்கப்பட்டனஎன்க் கூறப்படுகின்றது


இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா


No Image

ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின், நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெ. பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரெளலி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிலிப் க்ரௌலி மேலும் குறிப்பிட்டுள்ளார் .


சிறுமி மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை இன்றேல் வேலை நிறுத்தம் : பம்பேகம பிரதேசவாசிகள் (படங்கள்)


No Image
நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட கண்டி தெல்தோட்டை லூல்கந்துர பகுதியைச் சேர்ந்த இராமையா குமுதினி என்ற 16 வயது சிறுமியின் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிடின் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, குமுதினி வேலை செய்த அதே வீட்டில் பணிபுரிந்த பாலசுப்ரமணியம் ஜெயந்தி (27) என்ற யுவதியும் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெயந்தியும் லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இராமையா குமுதினி என்ற சிறுமி எஹலியகொட பம்பேகம எனும் பகுதி தோட்ட முகாமையாளரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (11.12.2009) குமுதினி வேலை செய்த வீட்டிலிருந்து அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.

முகாமையாளரின் சாரதி பேசுவதாகவும் குமுதினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த குமுதினியின் பெற்றோருக்கு, எஹலியகொட வைத்தியசாலையில் உயிரற்ற தமது மகளின் உடலையே காணக் கிடைத்தது.

மேலும் அவ்வுடம்பில் காயங்கள் இருந்ததையும் அவர்கள் அவதானித்துள்ளனர். இதையடுத்து முகாமையாளரின் வீட்டுக்குச் சென்ற போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்தது.

அதே வேளை குமுதினியுடன் வேலை செய்த ஜெயந்தி என்பவரின் நிலை குறித்தும் தகவல்கள் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் எஹலியகொடை பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்ய பெற்றோர் சென்ற போதிலும் முகாமையாளர் இன்றி இம்முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தாரின் உதவியுடன் அப்பிரதேச காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக