30 டிசம்பர், 2009

இந்தோனேசியாவில் தங்கியிருந்த 47பேர் ரோமேனியா மற்றும் ஆஸியில் மீள்குடியமர்வு-

இந்தோனேஷியாவின் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 47இலங்கை அகதிகள் சென்றுள்ளதாக இந்தோனேஷியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ருமேனியா 16 அகதிகளுக்கும், அவுஸ்திரேலியா 31 அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கனடாவும் அவுஸ்திரேலியாவும் 15 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது-கபே-


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 88 வன்முறைச் சம்பவங்கள் தம்மிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது. இவற்றுள் 12 பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது 06 வன்முறைச் சம்பவங்கள் இறுதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த தேர்தலின்போதான வன்முறைச் சம்பவங்களை விட இம்முறை வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 105முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட பிக்கு தம்பர அமிலதேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில்


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தம்பர அமிலதேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடி சந்தியில் பிக்குமாரினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது. பிக்கு தம்பர அமிலதேரர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என ஜே.வி..பி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பஸ்சேவை ஆரம்பம்-

சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இலங்கைப் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ்சேவையை நடத்தி வருகின்றன. ஏற்கனவே திருமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக