10 நவம்பர், 2009

தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஜனநாயக தமிழ் தேசிய முன்ணி இன்று சந்திப்பு








தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று முதற் தடவையாக கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன.

இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

மேலும் எதிர் காலத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு மித்து செயல்படுவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போதிலும் எதிர்காலத்தில் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவது என்றும் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக