21 நவம்பர், 2009

சுவீஸில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாடு-

சுவீஸில் நடைபெற்று வரும் இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் இறுதிநாள் இன்றாகும். சுவிஸின் பிறவுன் பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு இன்றுடன் மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்படுவதாக கூறப்படுகின்றது. இக்கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், , தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செயலர் ஹசன்அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றியுள்ளனர்.

78 இலங்கை அகதிகளும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவரென தகவல்-

இந்தோனேசியாவிலுள்ள ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து வெளியேறிய 78இலங்கை அகதிகளும் இன்னும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ரியூ தீவிலுள்ள டக்வின்டினா முகாமில் குறித்த 78 இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களுக்கு ஐ.நா சபையின் அகதிகள் பேரவை அகதி அந்தஸ்து வழங்காதவிடத்து அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசிய செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் தமது நாடு அகதிகள் தஞ்சம்பெறும் நாடாக இருப்பதை தாம் விரும்பவில்லையெனவும், எனவே அகதிகள் ஒரு மாற்றுக் குடியேற்ற நடவடிக்கையினை தீர்மானிக்க வேண்டுமென்றும் இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஓசியானிக் கப்பலில் இருந்த 78அகதிகளும் மனிதாபிமான அடிப்படையிலேயே இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் பரிசீலித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப15.00மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்


புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் தமது சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படுவர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக நடமாடக் கூடிய வகையில் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியேற்றப்படுவர்" என்றார்.

அகதிகளுக்கு முக்கியத்துவமிக்கதொரு விசேட அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிற்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது
மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்- ஜெனரல் சரத் பொன்சேகா

தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தாய் நாட்டுக்கு எதிராக நிலவிவந்த 30 வருட கால பயங்கரவாத்தை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்தினர் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகளாவர். உண்மையான தொழில்சார் இராணுவ வீரர்களாக யுத்தத்தை எதிர்கொண்டதன் விளைவாகவே பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த கம்பீரதன்மையை தொடர்ந்து இராணுவத்துக்குள் தக்கவைத்து கொண்டிருக்க வேண்டும். எந்தவொருவரும் இராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. யுத்தத்தை வெற்றிகொண்டு தாய்நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை சிலர் தூற்றுவதற்கு முற்படுகின்றபோதிலும் யுத்த வெற்றியின் உண்மையான பங்காளர்கள் தாமே என்பதை இராணுவ வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து விலகிக்கொண்டதன் காரணமாகவே 30 வருட கால பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளை, வீரர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் என்னால் முடியாது போயுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக சேவையாற்றிய மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு கவலையடைகிறேன். எனது 40 வருட கால சேவையின் நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை காரணத்தால் இந்தக் கடிதம் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றக்கிடைத்த காரணியாக அமைந்துள்ளது.

எனது உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்புக்குக்கு 100 வீரர்களையாவது பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாத அதேவேளை, தற்போது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 60 பாதுகாப்பு வீரர்களையும் 3 வாகனங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றதையடுத்து உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளது. தற்போது வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்வதற்கும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக