22 நவம்பர், 2009

கிழக்கு மாகாண சபையின் வரவி-செலவுத் திட்டத்தை தோற்கடித்து செயற்பாடுகளை முடக்க முயற்சி

மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கும் முதலமைச்சரை மாற்றுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இது வாக்கெடுப்புக்காக விடப்படும் போது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் 19 பேர் ஆளும் கட்சியில் உள்ளனர். எதிர்க்கட்சித் தரப்பில் 17 பேர் தெரிவு செய்யப்பட்டாலும் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாததன் காரணமாக 16 பேரே உள்ளனர். இந்த நிலையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த நால்வரின் உதவியுடன் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தரப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். இவ்வாறானதொரு நிலை கிழக்கு மாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டாலும் கிழக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மாகாண சபை நிதியை எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாத ஒரு முடங்கல் நிலையேற்படும். நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஜனாதிபதியினது அல்லது மத்திய அரசின் நிதியினைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டிய நிலைக்குள் மாகாண சபை தள்ளப்படும். கிழக்கு மாகாண சபையின் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் எதிர்காலத்தில் வேறு பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாமெனவும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக