18 நவம்பர், 2009

வன்னி சென்று திரும்பிய த.தே.கூ.உறுப்பினர்கள் பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு




வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் திங்கட்கிழமை விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வன்னி விஜயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.

குறிப்பாக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு வருவது என எடுத்த தீர்மானத்தின் பேரில் நேற்று மாலை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம், டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை, பா.அரியநேத்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பொறுத்த வரை விரைவான மீள் குடியேற்றத்தை வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கூறினர்.

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு என ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களில் பலரைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் உறவினர்கள் தவிப்பது குறித்தும் விளக்கினர்.

ஏற்கனவே இடம்பெயர்வின் போது, விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் 4,5 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை பர்வையிட அனுமதி மறுப்பு குறித்தும் இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆலோசகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட போது நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவும் அங்கு சமூகமளித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிட இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் மிலிந்த மொரகொட உத்தரவாதம் தந்ததாகவும் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக