9 அக்டோபர், 2009

பருவப்பெயர்ச்சி மழையை எதிர்நோக்கி முகாம் மக்கள் அச்சம் : சர்வதேச மன்னிப்பு சபை


யாழ். கோட்டை ராஜதந்திரிகளின் விடுதி;பெளத்த பிக்கு ஒருவர் அதன் அதிகாரி: அரசு நடவடிக்கை



யாழ் நகரில் உள்ள புராதன கோட்டை பகுதியை ராஜதந்திரிகள் தங்குவதற்கான விடுதியாகப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பெளத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வணக்கத்திற்குரிய வரப்பிட்டிய ராகுல தேரர் என்ற இந்த பெளத்த பிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பதவியேற்றுள்ளார். பழைய பூங்கா வீதியில் இவருக்கென பிரத்தியேக அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இங்கிருந்து பணியாற்றவுள்ள இவர் யாழ். குடாநாட்டில் உள்ள தொல்பொருள் நிலையங்கள், புராதன இடங்கள் என்பவற்றை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் கோட்டே பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இவர் யாழ். அரச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபகுதியிலுள்ள முகாம் மக்கள் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படப் போகும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கி அச்சமடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வவுனியா முகாம்கள் தொடர்ந்தும் இடநெருக்கடியுடனும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் இம்மாத பருவப்பெயர்ச்சி மழை காரணமாக, தற்காலிக கூடாரங்களில் வாழும் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என ஆய்வாளர் யொலாண்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கௌரவமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முகாம்களில் 5 தொடக்கம் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள், அவர்களிடம் சிகிச்சை பெற பொது மக்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்கவேண்டி ஏற்படுகிறது.

இந்த நிலையில் எவ்வாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைகளை வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக