29 அக்டோபர், 2009

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு


மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பிவைக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இடம்பெயர்ந்து அகதிகளாயுள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 40 ஆயிரம் பேரை இலங்கை அரசாங்கம் மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

இந்த நிலைமைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அமெரிக்க தூதரகம் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

"மக்களை விடுவிப்பதும் அவர்கள் தாமாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதும் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவுமென அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது. மனிதாபிமான உதவிகள் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருகின்றது.

யு.என்.எச்.சி. ஆர் மீள்குடியமரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக ஆறுமாதங்களுக்கு உலர் உணவு வகைளை வழங்குகின்றது.

மேலதிக உதவிகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவது உட்பட, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் 87 மில்லியன் டொலர்ககளை அமெரிக்கா செலவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக