18 செப்டம்பர், 2009

இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு விரைவில் சொந்த இடங்களுக்கு திரும்ப வழி செய்ய வேண்டும்- ஐ.நா. விசேட பிரதிநிதி

நலன்புரி முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரைவிரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிசெய்ய வேண்டும். முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிபொதுச்செயலாளர் லின் பஸ்கோ தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அவரது அமைச்சில் நேற்றிரவு சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் புதனன்று இலங்கை வந்த லின் பஸ்கோ நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியபகுதிகளுக்கு விஜயம்செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து நேரடியாக கலந்துரையாடியிருந்தார். முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பில் உங்களது அவதானிப்பு எத்தகையது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதல்ல என்பதை உலகின் பல்வேறு முகாம்களுக்கும் சென்றவன் என்றவகையில் நான் அறிந்துள்ளளேன். முகாம்களில் வாழ்வது நல்ல உணர்வை என்றுமே தந்ததில்லை. சொந்த இடங்களை விட்டு முடக்கப்பட்ட நிலையில் முகாம்களில் வாழ்வது என்றுமே நல்ல உணர்வை தரமாட்டாது. எனவே, இயன்றவரையில் முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அரசாங்கத்திற்கு பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் உள்ளதென்பதை நான் அறிவேன். இருப்பினும் பருவமழைக்காலம் அண்மித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்களை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவற்கு அரசாங்கம் வெளியிட்ட 180 நாள் வரைவுத்திட்டத்தில் பாதிநாட்கள் கடந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பான உங்கள் மதிப்பீடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லின் பஸ்கோ, என்னுடைய மதிப்பீடு முடிவடையும் வரையில் நான் இதுதொடர்பில் கருத்து கூறுவதற்கு காத்திருக்க வேண்டும்.

முன்னதாக ஐக்கியநாடுகள் பிரதிச்செயலாளருடனான சந்திப்பையடுத்து ஊடகவிலாளர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, எவ்வளவு விரைவாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற முடியும். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என இதன்போதுஆராயப்பட்டதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் 180 நாட்கள் திட்டத்தில் தற்போது 90 நாட்களே நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சிய நாட்கள் முடிவதற்குள்ள இடம்பெயர்ந்த மக்களில் கணிசமான தொகையானோர் மீளக்குடியமர்த்தப்படுவர் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார். இடம்பெர்யர்ந்த மக்களின் சுகாதரம், கல்வி போன்றவிடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக