3 செப்டம்பர், 2009

முல்லை.மாவட்ட உயர்நிலை அதிகாரிகள் இருவர்
முகாமிலிருந்து வெளியேற அனுமதி


புல்மோட்டை இடைத்தங்கல்
முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2 உயர் மட்ட அதிகாரிகள், தமது குடும்பத்தினருடன் வெளியேற பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜி.வில்வராஜா, முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளர் வி.எஸ்.தெய்வேந்திரன் ஆகிய இருவரும் அவர்களுடன் இருந்த தமது குடும்பத்தினருடன் புதனன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புல்மோட்டை இடைத்தங்கல் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளே இவர்களை அரச அதிபரிடம் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரத்தின் மனைவியும் மகளும் யுத்த மோதல்களின்போது கொல்லப்பட்டார்கள் என்பதும், அவர் தமது சகோதரியின் குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்து வந்து முகாமில் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான யுத்தச் சூழ்நிலையிலும் இறுதிவரை முல்லைத்தீவு பிரதேசங்களில் தங்கியிருந்து பணியாற்றியதன் பின்னர், இறுதி நேரத்தில் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த 7 உயர்மட்ட அதிகாரிகளுக்கு முல்லைத்தீவு அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை அரசாங்கம் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதி வழங்கியுள்ளது.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் உட்பட 5 உயரதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே அவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் தற்போது வவுனியா செயலகத் தொகுதியில் செயற்பட்டு வருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் இணைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகளிடமிருந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பிரதேசத்தில் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக முகாம்களில் உள்ள உயரதிகாரிகளை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளுக்கமைய, வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரினதும், இடைத்தங்கல் முகாம்களுக்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியின் சிபாரிசின் பேரிலும் இந்த உயரதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக