3 செப்டம்பர், 2009

அம்பாறையின் தமிழ் பிரதேசங்களில் ஜனநாயகவிரோதச் செயல்கள் தொடர்;வதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு-


அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ஜனநாயக விரோதச் செயல்கள் தொடர்;வதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைப் பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார். கிழக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிரதேசங்களில் மக்களின் வாழ்வுநிலை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாலும், அம்பாறை தமிழ்ப் பிரதேசங்களில் தொடரும் அரசியல் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இயல்புநிலைக்குத் தடையாகவுள்ளன. அரசியல் செல்வாக்குமிக்க சில குழுக்களால் தொடரும் வன்முறைகள் ஜனநாயக சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதால் கிழக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதநிலையே ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்;கள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது சந்தேகத்திற்குரிய நபர்கள் தம்மைப் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் இணைப்பு அலுவலகமொன்று அங்கு திறப்பதற்கு அக்குழுவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மாகாணசபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா, தனது பாதுகாப்பின் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வீட்டில் தங்கியிருந்தவேளை, அவரது வீட்டுக்கு முன்பாகக் கூடிய குழுவொன்று வன்முறைகளில் ஈடுபட முற்பட்டு, அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துள்ளது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுத்துநிறுத்தி, ஒரு சமாதான ஜனநாயக சூழலை ஏற்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும். இதன்மூலமே அப்பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தையும் அமைதியான சூழலையும் உருவாக்க முடியும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த 07 பேரை மலேசியா அனுப்ப ஏற்பாடு-


புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த ஏழுபேரை மலேசியாவிற்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இவர்களுக்கான கடவுச்சீட்டுக்கள் மற்றும் நுழைவு அனுமதிப் பத்திரங்கள் என்பன கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோவிலில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அமைச்சர் மிலிந்த மொறகொட, பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் கருத்துரைத்த பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி, புலிகளின் சிறுவர் போராளிகளாக இருந்த ஏழு பேருக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்துள்ளோம். இதற்குமுன் மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வாறான 140பேருக்கு ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தோம். இந்நடவடிக்கைகள் எமது அமைச்சின் ஊடாக மேலும் தொடரவுள்ளது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக