20 செப்டம்பர், 2009

ஒரு வாரம் கடந்தும் சொந்த மாவட்டங்களிலேயே முகாம் வாழ்க்கை



வவுனியா நிவாரணக் கிராமத்திலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டாவது தொகுதியினர் ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் சொந்த மாவட்டங்களிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக விடுவிக்கப்பட்டு, சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை சொந்த மாவட்டங்களுக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இக்குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த 72 குடும்பங்கள் (238 பேர்) சிங்கள மகா வித்தியாலயத்திலும்,45 குடும்பங்கள் (127 பேர்) குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் (130 பேர்) அக்கரைப்பற்று 4ஆம் கட்டையிலுள்ள பழைய நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியத்தில் தங்க வைக்கபபட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈச்சிலம்பற்றை, திருகோணமலை மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள 4 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு விபரங்களை பதிவு செய்ய வேண்டியிருப்பதால் இரண்டு நாட்களில் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பலரும் அந்நேரம் தெரிவித்திருந்தனர். எனினும் தொடர்ந்தும் இவர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

சில இடைத்தங்கல் முகாம்களில் உறவினர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படுகின்றது. ஓரிரு இடைத்தங்கல் முகாம்களில் இதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அதே வேளை ஈச்சிலம்பற்று செண்பகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பார்வையிட நேற்று முதல் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களைப் பொறுத்தவரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து இது வரை ஒரு தீர்க்கமான முடிவும் வெளியாக நிலையே காணப்படுகின்றது
கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட இந்திய வியாபாரிகள் திணைக்களத்தில் சமூகமளிக்க பணிப்பு



இலங்கைக் குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 82 இந்திய வியாபாரிகளையும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுற்றுலா விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கிடைத்த புகார்களையடுத்து கல்முனை பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்த 3 விடுதிகளை முற்றுகையிட்ட குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வியாழக்கிமை பெண்கள் உட்பட 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து, தடுத்து வைத்தனர்.

குறிப்பிட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கமைய 10 வியாபாரிகள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்குத் தமது கடவுச்சீட்டுக்களை மீண்டும் பெற சென்றிருந்தனர். எனினும் புதன்கிழமை நாடு திரும்புவதற்கான விமானச் சீட்டுக்களை உறுதிப்படுத்திவிட்டு செவ்வாய்கிழமை சகலரையும் சமூகமளிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாங்கள் நாளை மறுதினம் செவ்வாய்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவிருப்பதாக இந்திய வியாபாரிகள் தெரிவித்தனர்.

"கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இவ்வியாபாரத்தில் நாம் ஈடுபட்டு வந்தோம். ஆரம்பத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்த வியாபாரி ஒருவர்,

"வியாபாரத்தின் நிமித்தம் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளை அறவீடு செய்வதற்குக் குறைந்தது 45 நாட்களாவது தேவை என்பதால் அதற்காக என்றாலும் தங்களை தங்கியிருக்க அனுமதித்தால் போதும். தாங்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் பெற்றுமே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்"என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் இப்படி 300இற்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக குடிவரவு ,குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
தவறான தகவல்களை நெடுமாறன் பரப்புகிறார் : கருணாநிதி குற்றச்சாட்டு




ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, அவரது அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

"அந்தச் செய்தித் தொகுப்பிலிருந்து நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏதோ எனக்கு ஒரு முடிவு கட்ட திட்டமிட்டு அந்தப் பழியை உலகத் தமிழர்கள் யார் மீதாவது போட்டுவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள, அந்தக் கோஷ்டியினர் திட்டமிட்டு முன்கூட்டியே செய்யும் - தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சாமர்த்தியமான பிரச்சாரம் இது என்றே நான் திட்டவட்டமாகக் கருத வேண்டியிருக்கின்றது.

பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தான் பிடிக்கும். ஜெயலலிதாவைப் போல அவரைப் பிடித்து 'குண்டர்கள்' சட்டத்திலோ, 'பொடா' சட்டத்திலோ மாதக்கணக்கில் சிறையில் போட்டால், அதுதான் சிறந்த நடவடிக்கை என்பார்கள். எது எப்படியிருப்பினும் 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்".

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்
அனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்


தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்,

"ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன்.

முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.

மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.

இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.

எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.

அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
எவ்வித பாகுபாடும் இன்றி மீள்குடியேற்றம் செய்யவும் : அகதிகள் அரசிடம் கோரிக்கை
வன்னி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கு அமைய குடியேற்றப்படுகின்றனர்.

இவ்வாறு குடியேற்றப்படுபவர்களின் குடும்பத்தைச் சார்ந்த கணவனோ அல்லது பிள்ளைகளோ தடுப்பு முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய மாட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்களது தரப்பில் கூறப்படுகிறது. இது எந்தவகையில் நீதியானது என்று முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கேசரி வார இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

முதலாம் கட்ட மீள் குடியேற்றத்தின் போது இவ்வாறான நிபந்தனை விதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட குடியேற்றத்தின் போது பாரபட்சம் காட்டுவது அநீதியானது. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி எம்மையும் குடியேற்ற நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முகாம்களில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முகாம் மக்களாகிய நாங்கள் அறியத் தருவது :

"வன்னியிலிருந்து உறவுகள் பலரை இழந்த நிலையில் அப்பாவி தமிழ் மக்களாகிய நாம் தற்போது முகாம்களில் வாழ்கின்றோம். நாம் வன்னியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை விபரிக்க முடியாது. பல திசைகளிலுமிருந்து எம்மை நோக்கி வந்த ஷெல் குண்டுகளுக்கு மத்தியில் பலவிதமான இடர்பாடுகளுக்கு மத்தியில் எமது உயிர்களைக் காக்கும் எண்ணத்துடன் தப்பி ஓடி வந்த நாம் இன்றும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே வாழ்கிறோம்.

அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குடிநீருக்கு வரிசை, மலசலம் கழிப்பதற்கு வரிசை இவ்வாறு வரிசையில் நின்றுதான் போக வேண்டும். எதை அடக்க முயன்றாலும் வயிற்றோட்டத்தை அடக்க முடியுமா? சிலர் வரிசையில் மலசலம் விடுவார்கள். இவ்வாறு இருக்கும் போது இறப்பவர் தொகை அதிகமாகும். இம்முகாம்களில் தற்போது இருக்கும் நோய்களான செங்கண்மாரி, வயிற்றோட்டம், அம்மை முதலான பல நோய்கள் பரவுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களை சொந்த முகவரியாகக் கொண்டவர்களை மீள்குடியேற்றம் செய்தனர்.

முதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்தனர். பின்னர் தற்போது இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் இப்போது நடைபெற்றுள்ளது. இதில் தான் பிரச்சினை. இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் போது கணவனோ அல்லது பிள்ளைகளோ அகதி முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யமாட்டோம் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

பிரிவினைக் காட்டுவது நியாயமா?

இது என்ன நீதி? முதலாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இவ்வாறு பிரிவினை காட்டாமல் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இப்படி பிரிவினை காட்டுவது நியாயமா?

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த ஒரு காரணத்தால் எமது உறவுகள் சரணடைந்தனர். அது குற்றமா? அவர்கள்தான் சரணடைந்து விட்டார்களே, பிறகு ஏன் அவர்களின் தாய், மனைவி, பிள்ளைகளையும் சிறையிலடைத்த மாதிரி இம் முகாம்களில் வைத்துள்ளனர்?

உதவி இல்லாமலும் கையில் பணம் இல்லாமலும் எத்தனை பேர் கஷ்டப்படுகின்றனர். இம் மக்களில் மட்டு., அம்பாறை, திருகோணமலை மக்களில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் தங்களின் பெயர், விபரம் வந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் போனது பெரும் கவலையாக உள்ளது.

எனவே, எங்கள் குறைகளைத் தீர்க்குமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கிறோம். இத்திட்டத்தை மாற்றி அனைத்து மக்களையும் தங்கள் சொந்த மாவட்டங்களில் மீள் குடியமர்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக