26 ஜனவரி, 2011

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தி லிருந்து இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்ப ட்டுள்ளது.

மூன்று கட்டங்களைக் கொண்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை நேற்று நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே சேவியர் மேற்கண்டவாறு கூறினார்.

நுரைசோலை அனல்மின் நிலையத்தின் முதற் கட்டத்தின் மூலம் முன்னூறு மெகாவோற் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர். இத்திட்டத்தின் மூன்று கட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தொளாயிரம் மெகாவோற் மின்சாரத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியுடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தியை ஆரம்பித்தால் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதனால் மின் உற்பத்திக்கு ஏற்படும் பெருந்தொகையான செலவினத்தை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு இருபது ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் விவசாயத்திற்கு மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக