10 செப்டம்பர், 2010

'ஈதுல்பித்ர்' - முஸ்லிம்களின் ஈகைத்திருநாள் இன்று முஸ்லிம் மக்கள் இன்று தமது நோன்புப் பெருநானைக் குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.










நம் நாட்டில் மட்டுமன்றி, உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வழ்கின்றனரோ அங்கெல்லாம் இப்பெருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

'ஈதுல்பித்ர்' என்பது பொதுவாக நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? முழு உலக முஸ்லிம்களும் ஒருமாத காலம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து கொண்டாடும் பெருநாள் இது எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு. இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் முஸ்லிமாக முடியாது. விசுவாசப் பிரகடணம் (கலிமா), தொழுகை(ஐந்து நேரம் வணங்குவது), ஏழை வரி(ஸாகத்) , நோன்பு(றமழான் மாதம் முழுவதும்), புனித கவுபாவில் குறிப்பிட்ட கால எல்லையில் வணங்குதல் (ஹஜ்) என்பனவே இவை.

அந்தவகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.

பொதுவாக முஸ்லிம்களின் கலண்டர் அல்லது மாதங்கள் யாவும் சந்திரனை மையமாகக் கொண்டே கணிக்கப்படுகிறது. நடைமுறை உலகில் நாம் சூரிய ஆண்டை பின்பற்றுவது போல முஸ்லிம்கள் சமய விடயங்களில் சந்திர ஆண்டையே பின்பற்றுகின்றனர். இதன் காரணமாகவேதான் பிறை பார்த்து நோன்பு நோற்று பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றனர்.

அதாவது றமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று சவ்வால் மாதம் முதலாவது பிறை கண்டதும் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை பிறை பார்ப்பது முக்கியமாகிறது.

இதிலும் ஒரு முக்கிய நிபந்தனை பின்பற்றப்படுகிறது. வெற்றுக் கண்ணால் ஆகக் குறைந்தது இரு ஆண்கள் (4 கண்கள்) பிறையைக் கண்டால் மட்டுமே அந்நாட்டு மக்கள் மாதம் பிறந்ததாக ஏற்பர்.

மாநாட்டில் அறிவிப்பு

இதன்காரணமாகவே பெரிய பள்ளிவாயலில் பிறை பார்ப்பது தொடர்பாக மாநாடு நடத்தப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே அது அறிவிக்கப்படுகிறது.

அதே நேரம் பெருநாள் தினத்திற்கு முன் ஒரு மாதகாலம் நோன்பு நோற்பது என்பதும் சாதாரண காரியமல்ல. ஏனெனில் அதிகாலை சுமார் 4.45 மணிமுதல் மாலை சுமார் 6.15 மணிவரை ஏறத்தாழ 14 மணித்தியாலங்கள் எந்த உணவோ பானமோ உட்கொள்ளாமல் தான் நோன்பு நோற்கப்படுகிறது. உணவுத்தொகுதியில் ஒரு துளி உணவோ, ஒரு துளி நீரோ சென்றடைவதில்லை.

அதுமட்டுமல்ல, அழகிய அல்லது ரசனை கொண்ட எதனையும் நோக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்வதும் வேண்டற்பாலது. உதாரணமாக ஒரு நடனத்தை அல்லது இச்சை தரும் எக்காட்சியையும் பர்க்காது இருப்பதும் முக்கியம். ஐம்புலன்களும் அடக்கப்படுவதே உண்மையான நோன்பு என வழங்கப்படுகிறது.

இந்நாளில் மனக்கட்டுப்பாடும் அத்தியாவசியமாகிறது. பாவமான விடயங்களை, மனோ இச்சை தரக் கூடிய விடயங்களை, மனதால் கூட நினையாதிருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அனைத்து ஆசாபாசங்களையும் துறந்து, ஒருமாதம் கடத்துவது என்பது நல்ல பயிற்சி இன்றேல் சிரமமான காரியமாகும். அத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். தான தர்மங்கள் செய்யப்பட வேண்டும்.

'சதகத்துல் பித்ரா'

ஒருவருக்கு சுமார் 2 கிலோ 300 கிராம் எடை கொண்ட தானியம் வீதம் (அரிசி) கட்டாயம் ஏழைகளுக்கு வழங்கவேண்டும். இதுகட்டாயக் கடமையாகும். இதனை 'சதகத்துல் பித்ரா' என்பர்.

இவ்வாறு பிறருக்கு கொடுப்பதை அதிகமதிகமாக்கிய காரணத்தால் அல்லது ஈகையை வழியுறுத்துவதால் அதனை அடுத்து வரும் பெருநாளை 'ஈகைத் திருநாள்' என்ற பொருளோடு 'ஈதுல் பித்ர்' கொண்டாடப்படுகிறது.

இறைவனின் (அல்லாஹ்வின்) அன்பையும் பொருத்தத்தையும் நாடி ஒருமாத காலம் தமது அனைத்து சுகபோகங்ளையும் துறந்து அல்லது தியாகம் செய்து வாழ்ந்தார்களோ அதற்கான மகத்தான கூலி அந்த இறைவனிடமிருந்து கிடைக்கும் நாள்தான் இந்த நோன்புப் பெருநாளாகும். அதாவது இறைவன் தன் நல்லடியார்க்கு நரக விடுதலை அல்லது சுவர்க்கம் வழங்கும் தினமுமாகும்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை உலகவாழ்க்கை போலியானது என்றும் உண்மை வாழ்வு மரணத்தின் பின் உள்ளது என்றும் ஏற்றுக் கொள்கின்றனர்.

எனவே மரணத்தின் பின் உள்ள வாழ்வு சுவர்க்கமாக இருக்க வேண்டும் என்பதனால் நோற்ற நோன்புக்குக் கூலி வழங்கும் இந்நாள் நிச்சயம் அது பெருநாளாகத்தான் இருக்குமல்லவா?

அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக