30 ஜூலை, 2010

நிரந்தரமாக வெளியேறியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பெப்ரல் அமைப்பு





யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டு முறையான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே பெவ்ரல் அமைப்பின் நோக்கமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் இடாப்பு பதிவு நடவடிக்கைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன. அனைவரும் ஆர்வத்துடன் வாக்காளர் பதிவில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படவேண்டும். அந்த வகையில் சரியான வாக்காளர் இடாப்பு உருவாக்கப்படவேண்டும் என்றே கூறுகின்றோம்.

கடந்தகாலங்களில் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிர்நதரமாக வெளியேறிவிட்டனர். வேறு மாவட்டங்களுக்கு ஒரு பகுதியினர் வந்து அங்கு வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனவே புதிய திருத்தம் அவசியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் நிரந்தரமாக அம்மாவட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஆனால் அந்த தகவலை உறுதிபடுத்த முடியவில்லை. மேலும் நிரந்தரமாக சென்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தகவல்கள் எங்கும் இல்லை. எனவே 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவின்போது இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டு புதிய இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஒரு ஆரோக்கியமான நிலைமையின் கீழ் புதிய இடாப்பு வரவேண்டும். மேலும் 2011 ஆம் ஆண்டில் சனத்தொகை மதிப்பீடு இடம்பெறவுள்ளதாக தெரிகின்றது. அந்த சந்தர்ப்பம் எமக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக