30 ஜூலை, 2010

நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது:







உயர் நீதிமன்றம் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள்.

அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இதையடுத்து, வக்கில் கருப்பன் என்பவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் கூறி இருந்ததாவது:

ராஜீவ்காந்தி கொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை 1998ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு குறித்த குழு சிபாரிசு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், 1998ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி, புலனாய்வின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலை, விசாரணை நீதிமன்றில் புலனாய்வு துறை தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் நுதிமன்றிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் புலனாய்வு மறைத்ததால், நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இம்மனு, நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறி, நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அவர்கள் அனுமதி அளித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக