10 ஜூன், 2010

நாட்டின் அரசமைப்பில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம் : லக்ஷ்மன் யாப்பா

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்தவகையில் துரித கதியில் கட்டம் கட்டமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: "அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. .

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர். .

தற்போது 30 வருடகால பயங்கரவாதம் முடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. .

அங்கீகாரம்.

அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் யஐஐ அ, லஐ, லயஐஐஐ அ, ஆகிய அத்தியாயங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் புதிய திருத்தங்களை முன்வைப்பதற்கும் அடையாளம் காணப்பட்ட சட்டங்களுக்குத் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும் இது தொடர்பான சட்ட வரைவுகளை செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

அமைச்சரவை உபகுழு.

அதேவேளை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான யோசனைகள் என்பன தொடர்பில் ஆராய அண்மையில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இடம்பெறுகின்றேன். தற்போது குறித்த குழு பல தடவைகள் கூடி யோசனைகளை தயாரித்து வருகின்றது. சில வாரங்களில் நாங்கள் இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்போம்.

சல்மான்கானின் திரைப்படம் இலங்கையில்

மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தியதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அதாவது வேறு ஒரு நாட்டில் படப்பிடிப்புக்களை மேற்கொள்ளவிருந்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் திரைப்படம் தற்போது முழுமையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. 150 இந்திய குழுவினர் இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவார்கள்."இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் : கேள்வி: எவ்வாறான அம்சங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூற முடியுமா?

பதில்: பல விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறும். அவற்றை விபரமாக தற்போது என்னால் கூற முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேர்தல் முறைமை உள்ளூராட்சி முறை போன்றவற்றில் திருத்தங்கள் இடம்பெறவுள்ளன.

கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எவ்வாறு திருத்தம் செய்யப்படும்?

பதில்: அதாவது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய வகையில் திருத்தம் செய்யப்படும். தற்போது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஜனாதிபதி பதவிக்கால தடவைகளை நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றதா?

பதில்: ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பதனை மக்களே தீர்மானிக்கின்றனர். எனவே அதில் சிக்கல்கள் இல்லை. யார் ஜனாதிபதியாயானலும் மக்களே தீர்மானிக்கின்றனர்.

கேள்வி:அரசியல் தீர்வு விடயமும் அரசியலைமைப்பு திருத்தங்களில் உள்ளடக்கப்படுமா?

பதில்: அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேசப்படுகின்றது

கேள்வி: எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தாரே?

பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேசப்படுவதாகவே கூறினேன். இதில் பல்வேறு விடயங்கள் உள்ளன.

கேள்வி: அப்படியானால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு?

பதில்: நாங்கள் முதற்கட்டமாக வடக்கில் மாகாண சபையை நிறுவவுள்ளோம்.

கேள்வி:: அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஏதாவது பேசப்படுகின்றதா?

பதில்: நாங்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுவருகின்றோம். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவருகின்றோம். உலகில் எங்குமே இடம்பெறாதவாறு இடம்பெயர்ந்த மக்கள் மிகவேகமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினரின் யோசனைகளுக்கா தற்போது அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்:அந்தக் குழுவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கேள்வி:மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாகவும் பேசப்படுகின்றதா?

பதில்: பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக