22 பிப்ரவரி, 2010


வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி?


வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கடந்த ஜனாதிபதித் தேரதல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணையாளருடனான பேச்சின் படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.

பாராளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.

அரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.


கெரவலப்பிட்டிய அனல்மின் நிலைய இறுதிக்கட்ட பணி பூர்த்தி

25ம் திகதி ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டு ள்ளது.

முள்ளிக்குளம் பகுதியில் சி 4 ரக வெடிமருந்து மீட்பு


மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த வெடிமருந்து 37 மூடை களில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப் பதாகவும் அவர் கூறினார். அண்மை க்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.


அநுராதபுரம் வடக்கு:

60 குளங்களை புனரமைக்க ஜனாதிபதி ரூ.10 கோடி ஒதுக்கீடு



அநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த முப்பது வருட காலமாக புனரநிக்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.


ரூபவாஹினி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா


தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.


இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட 98 வகை மருந்துப் பொருட்கள்

இவ்வாரம் கொழும்பு வந்து சேரும்




அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 98 வகையான மருந்துப் பொருட்களும் இவ்வாரம் கொழும்புக்கு வந்துசேரும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்கு துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

ஆறு மாத காலத்திற்குத் தேவையான இந்த மருந்துப் பொருட்கள் 12 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மேற்படி 98 வகையான மருந்துப் பொருட்களும் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாத காலத்திற்குத் தேவையான அளவு தான் கையிருப்பில் உள்ளன.

இது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனால் இம்மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை உடனடியாக அங்கீகாரம் வழங்கியது. இதனடிப்படையில் இம் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யவென திறைசேரி மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள், அடங்கிய குழு கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றன.

மருந்துப் பொருட்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்ததும் அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி கூறினார்.

.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி

மட்டு. முதன்மை வேட்பாளர் அமீர் அலி


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


20 ஆயிரம் பேர் தேர்தல் கண்காணிப்புப் பணியில்

75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் கடமையில்




பாராளுமன்றத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புக் கடமையில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழு க்கள் தீர்மானித்துள்ளன.

இது தவிர சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை இந்த நிறுவ னங்கள் ஈடுபடுத்த தீர்மானித்துள் ளன.

பெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள் நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர் களையும் ஈடுபடுத்த முடிவு செய்து ள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர் களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.

வேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பிற்கான மத் திய நிலையம் 4500 உள்நாட்டு கண் காணிப்பாளர்களையும் 25 வெளி நாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

கெபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கெபே இணைப்பாளர் கீர்த்தி தென் னகோன் கூறினார்.



நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம்


கொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை


‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமா னால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.

நகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக