22 பிப்ரவரி, 2010


பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்



எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடு படுத்த தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தீர்மானித்துள்ளன.

இவர்களுர் சுமார் 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த இந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.பெப்ரல் அமைப்பு 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளதாக பெப்ரல் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாரச்சி கூறினார்.வேட்பு மனு முடிவடைந்தவுடன் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பிற்கான மத்திய நிலையம் 4500 உள்நாட்டு கண்காணிப்பாளர்களையும் 25 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.

கபே அமைப்பு 6 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்தும் என கபே இணைப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறினார்.



வாக்குகள் எண்ணும் நிலையங்களில் பணியில் ஈடுபட கண்காணிப்பாளர்கள்




வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்குவார் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணையாளரை கோரியது அதற்கு ஆணையாளர் சாதகமான பதில் வழங்குவார் என நம்புவதாகவும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது பற்றியும், வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்தே வாக்குகள் எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட அனுமதிக்குமாறு தமது அமைப்பு ஆணையாளரை கோரியதாக ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். தமது கோரிக்கைக்கு ஆணையாளர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் விரைவில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆணையாளருடனான பேச்சின்படி வாக்கு எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அமைதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இதேவேளை வாக்குச்சாவடிகளுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பெப்ரல் அமைப்புக்கும், சி. எம். ஈ. வி நிறுவனத்திற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் உட்பட அதிகமான வட பகுதி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காதது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வகையில் போக்குவரத்து வசதிகள் அளிக்கப்படாமையால் பலருக்கு வாக்களிக்க முடியாமல் போனதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்துள்ளார். வடக்கிலுள்ள வாக்காளர்களை மீள்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் ஆணையாளர் இணங்கியுள்ளார்.

அரச உடமைகளை பாவிப்பது, ஊடகங்களின் செயற்பாட்டை கவனிப்பது பொலிஸ் விடயங்கள் என்பன தொடர்பில் முறையிட தனித்தனிக் குழுக்கள் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது இது தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.



அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் விஜயம் வீரகேசரி இணையம்






மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,முல்லிக்குளம்,கொக்குப் படையான் கிராமங்களுக்கு மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு விஜயம் செய்த அமைச்சர்,1990 ஆண்டு இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் வசித்த பிரதேசங்களை பார்வையிட்டதுடன்,மீண்டும் அம்மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இம்மக்களது மீள்குடியேற்றத்ததை துரிதப்படுத்த,காடழிப்பு,கிணறுகளை துப்பரவு செய்தல்,விவசாய,கடற்றொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்தல்,கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை சேதமடைந்துள்ள பள்ளிவாசல்களை மீள் புனரமைப்பு செய்துதருமாறு கிராம மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வேண்டுகோளையும்விடுத்தனர். அதனையடுத்து அமைச்சர் முல்லிக்குளம் கிறிஸ்தவ தேவாலயத்தினையும் பார்வையிட்டதுடன்,அங்கு மதக் கடமைகளை பக்தர்கள் மேற்கொள்ளும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு கடறபடையின் வடமேல் பிராந்திய கட்டளை அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

மேலும் கொக்குப்படையான் கிராமத்துக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அம்மக்களது பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடன் அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிகான் ஷரீப்,கடற்றொழில் இணைப்புச் செயலாளர் எஸ்.யஹ்யான் உட்பட முக்கிய அதிகாரிகளும் இங்கு வருகைத்தந்திருந்தனர்


ஐ.தே.மு வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நாளையுடன் முடிவு:பாலித




எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் இறுதி பணிகள் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடும் என்று புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட குழுத் தலைவருமான பாலித ரங்கே பண்டார கூறினார்.

சில மாவாட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,கையொப்பம் இடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் தெரிவு குறித்தும்,இட ஒதுக்கீடுகள் குறித்தும் தொடர்ந்து பேச்சக்கள் இடம்பெற்று வருவதாகவும் குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார கூறினார்.

அதேவேளை ஜெனரல் சரத் பொன்செகா தலைமையிலான புதிய ஜனநாக முன்னணியும் சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாக ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் முஹம்மத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதேநிலையில் தற்பொது இலங்கை அரசயலில் மிகவும் பிரபலங்களாக பேசப்பட்டுவரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்று மாலைக்குள் தமது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

கிழக்கில் தமது அணி வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம் பெறுவதாக தெரிவித்த அவர் எவ்வாறாயினும் திங்கட்கிழமை மாலை பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும் என்றும் 25 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னால் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் இம்முறை,புத்தளம் மாவட்டத்தில் அல்லது வன்னி மாவட்டத்தில் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிவுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக