4 பிப்ரவரி, 2010

03.02.2010 தாயகக்குரல்


ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதுடன் இன்று அரசுக்கெதிரான ஆர்பாட்டங்களையும் நடத்தியுள்ளன. தேர்தல் முடிந்தபின்னர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறையாக நடந்துள்ளதாக கூறியிருந்தார். இப்போது தேர்தல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஒரேமாதிரியானதல்ல. கணனியை பயன்படுத்தி தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குச் சாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் மோசடிகள் நடைபெற்றதாக கூறிக்கொண்டு நாடுபூராவும் சேறுபூசுவதை விட்டுவிட்டு தேர்தல் மோசடிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சட்டதரணி நிஹால் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டவர் அல்லது பிரேரித்தவர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஒரு மாதகாலத்துள் உயர்நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்வதன்மூலம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். எனவே தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போழுது என்று அறிவதற்கு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தாhர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 3வது திருத்தம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதி தொடர்பான வழக்கை 2005ல் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்ததையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து சட்ட அறிஞர்கள் பலரும் பலவித கருத்தை வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி மகிந்தாவின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து ஆராய்ந்த உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழு ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 19ம் திகதி ஆரம்பமாவதாகவும் நவம்பர் 19ம் திகதியில் இருந்து இரண்டு வாரத்துக்குள் ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே பொதுத் தேர்தல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. ஏப்ரல் மாதத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைகிறது. எனவே ஏப்ரல் மாதம் முடிவதற்குமுன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும்.

பொது தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தற்போதைய தேர்தல் முறையை மாற்ற தீர்மானித்திருந்தது. எதிர்கட்சிகள் ஒத்துழைத்தால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்து நடைமுறைப்படத்தலாம். அதற்காக எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோரியுள்ளது. ஒருவார காலத்திற்குள் எதிர்கட்சிகள் சாதகமான பதிலை தராவிட்டால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை விரைவில் நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காது எனத் தெரிகிறது. இந்த தேர்தல் முறையில் கொண்டுவரப்படும் மாற்றத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 5ம் திகதி கூடும் பாராளுமன்றமே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அன்றே பாராளுமன்றம் கலைக்கப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை பொதுத் தேர்தலுக்கு தயாராகும்படி கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிஇ மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிஇ முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன யானைச் சின்னத்தில் கூட்டாக கேட்கலாம் என தெரிகிறது. வடக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டாக பங்குபற்றிய ஈ.பி.டி.பி. பொது தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தாங்களும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்வதாக கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றி என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்மை பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வடக்கு கிழக்கில் போட்டி போட்டு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.

தமிழர்களின் தேசியம்இ சுயநிர்ணயம்இ தன்னாட்சி என்பவற்றைப் பெறுவதற்கு தொடர்ந்தும் போராடுவது என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மகாநாடு என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். அதன் பின்னரே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்ததாக அறிவித்தனர்.

தமிழ் மக்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பல வாக்குறுதிகளை வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்டிருந்தது. இருந்தபோதிலும் வடக்கில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்களில் 30 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். தெற்கில் தேர்தல் மோசடிகள் என்ற குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் வடக்கில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எழவில்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களித்த இந்த தேர்தலில் 80 வீதத்துக்கும் மேலான மக்கள் இவர்களை ஆதரிக்காததன் மூலம் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதை தமிழ் மக்கள் தெரிவித்துவிட்ட நிலையில் சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு மாபெரும் வெற்றி என்று கூறுவது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக