29 ஜனவரி, 2010

இரகசிய இடங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் - ஐ.நா .மனித உரிமை விசாரணையாளர்கள்
No Image

இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஆகியன உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து மக்களை இரகசியமாக தடுத்து வைக்கும் நடைமுறைகள் பற்றி ஐக்கியநாடுகள் விரிவான முறையில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்கள் மேற்படி 221 பக்க அறிக்கையில் அடங்கியுள்ளன.

இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் காரணமாக இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக, இலங்கை இராணுவ அதிகாரிகள், இராணுவ சீருடையில் அல்லது சிவில் உடையில் தமிழ் இனத்தவர்களை கைது செய்து வாரக்கணக்கில் அவர்களை இரகசிய இடங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தடுத்து வைத்து சித்திரவதை செய்து விசாரணைக்கு உட்படுத்தும் இரகசிய இடங்களில் ஒன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதிக்கருகிலுள்ள ஒரு இராணுவ முகாமாகும்.

தடுத்து வைக்கப்படுவோர் அநேகமாக சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

1992ஆம் ஆண்டில், இராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியதுடன் இரகசிய தடுப்புக்காவல் முகாம்களை நடத்துவதற்கும் அனுமதி அளித்து புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தது.

1993ஆம் ஆண்டு ஜுன் மாதம் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தில் இரகசிய தடுப்பு முகாம்கள் சட்டவிரோதமானவை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்தும் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸாராலும் இராணுவத்தினராலும் ஆட்கள் கடத்தப்படுவது, இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவது, ஆட்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் அமைப்புகளும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் பேரவையின் ஆட்கள் காணாமல் போவது தொடர்பான செயலாற்றுக்குழு 2008ஆம் ஆண்டு பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போவது அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தது.

மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அதன் இறுதி அவதானிப்புகளில், ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள் ஆகியன் தொடர்பாக இருந்துவரும் சிறப்புரிமைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தது. ஆட்கடத்தல், சட்டவிரோத தடுப்பக் காவல், சிதிரவதை சம்பவங்கள் ஆஈகியன தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அநேகமான வழக்கு விசாரணைகள் திருப்திகரமான சாட்சியம், சாட்சிகள் இல்லாமை போன்ற காரணங்களுக்காக முடிவற்ற நிலையில் உள்ளன.

இத்தகைய பெருமளவிலான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இவற்றக்கு பொறுப்பான மிகக் குறைந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளே குற்றவாளிகளாக காணப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதால் அவர்கள் இது சம்பந்தமான முறைப்பாடுகளை தெரிவிக்க அஞ்சுகிறார்கள் என்றும் மனித உரிமைகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய நாடுகள் மத்தியில் எதேச்சாதிகார ஆட்சியை நீண்டகாலமாக நடத்திவந்த அமெரிக்கா மற்றும் சோவித் தலைவர் ஜோசேப் ஸ்டாலின், சிலி யின் சக்திவாய்ந்த தலைவர் ஒகொஸ்டோ பினோசெற் போன்ற தலைவர்கள் இரகசிய சிறைக்கூடங்களை நடத்தி வந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக