24 ஜனவரி, 2010

யாழ்.,கிளிநொச்சி மாவட்டங்களில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இதுவரையில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை



News Photo

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றோரில் இதுவரையும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை நான்கு மணி வரை தத்தமது தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆளடையாளத்தை நிரூபித்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த 2,49,924 பேருக்கான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படாதுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களும் இடம்பெயர்ந்தவர்களும் உள்ளடங்கலாக இந்த இரு மாவட்டங்களிலும் 7, 21, 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் யாழ். மாவட்டத்தில் 6, 30, 548 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 90, 811 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தபால் மூலம் வாக்களித்தோர் , விண்ணப்பித்திருந்தோர் தவிர்ந்த மீதியான 7, 10, 435 பேரில் 2, 49, 924 பேருக்கான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்படவில்லையென்ற தகவலே இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மொத்த வாக்காளர்களான 6, 25, 986 பேரில் 4, 50, 685 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1, 75, 301 பேருக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை.

இதுபோன்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற 84, 449 வாக்காளர்களில் 9, 826 பேருக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 74, 623 பேருக்கு இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

இற்றைவரை வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தத்தமது தபால் நிலையங்களுக்குச் சென்று 2010. 01. 26 ஆம் திகதி பிற்பகல் 4. 00 மணி வரை தமது ஆள் அடையாளத்தைக் காண்பித்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது கணிசமானளவு இடம்பெயர்ந்த வாக்காளர் வதிகின்ற வலிகாமம் பிரதேசத்திற்கான வாக்காளர் அட்டைகள் மருதனார் மடத்தில் இயங்கும் தெல்லிப்பளை தபால் நிலையத்திலும், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் குடத்தனை உப தபால் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டைகளை மேற்குறிப்பிட்ட இரண்டு தபால் நிலையத்திலும் ஆள் அடையாள அட்டையைக் காண்பித்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வாக்களிப்பதற்கான விசேட அடையாள அட்டை தேர்தல் திணைக்களத்தினால் வாக்களிப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்படும் அடையாள ஆவணங்கள் வருமாறு:

1. தேசிய அடையாள அட்டை

2. செல்லுபடியான கால எல்லையைக் கொண்ட கடவுச் சீட்டு

3. செல்லுபடியான கால எல்லையைக் கொண்ட சாரதி அனுமதிப் பத்திரம்

4. ஓய்வூதிய அடையாள அட்டை

5. முதியோர் அடையாள அட்டை

6. ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வணக்கத்திற்குரிய குருமாருக்கான அடையாள அட்டை.

7. ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை

8. தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை

இந்த 8 ஆவணங்களையும் வைத்திராத வாக்காளர்களுக்காக யாழ். மாவட்டத்தில் விசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பிரதேச செயலக, உதவி அரசாங்க அதிபர் பணிமனைகள் ஊடாகச் செய்யப்பட்டு இற்றை வரை 12, 969 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடு

யாழ். மாவட்டத்தினுள் வழமையாகப் பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்திருக்கும் வாக்காளர்களுக்காக தேர்தல் திணைக்களத்தினால் விசேட போக்குவரத்து வசதிகள் இலவசமாகச் செய்து கொடுக்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்திற்குச் செல்லவிருக்கின்ற வாக்காளர்களுக்கும் வன்னி தேர்தல் தொகுதிக்குச் செல்லவிருக்கின்ற வாக்காளர்களுக்கும் ஏ 9 வீதியூடாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதற்குரிய விபரமான அறிவித்தல் இன்றைய யாழ். மாவட்ட பத்திரிகைகளில் பிரசுரமாகும். அதேபோன்று வவுனியாவிலிருந்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கும் வாக்காளர்களுக்கு மாத்திரம் இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

வாக்களிக்கும் நேரம்

வாக்களிப்பு காலை 7. 00 மணி தொடக்கம் பிற்பகல் 4. 00 மணி வரை நடைபெறும்.

வாக்குகளை அடையாளமிடும் ஒழுங்கு முறை

ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற காரணத்தினால் வேட்பாளர் ஒருவருக்கு வாக்கொன்றையும் இரண்டு வேறு வேட்பாளர்களுக்கு இரண்டாம் விருப்பையும் மூன்றாம் விருப்பையும் அடையாளமிட முடியும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் யாழ். மத்திய கல்லூரியிலும் தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் புனர்வாழ்வு நிலையத்திலும் பனை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்களுக்கான வாக்கெடுப்பு நிலையம் அதே இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் நிலையங்கள்

யாழ். மாவட்டத்திலுள்ள 11 தேர்தல் தொகுதிகளுக்கான 22 வாக்கெண்ணும் நிலையங்கள் அஞ்சல் வாக்குகளை எண்ணும் நிலையம், இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குகளை எண்ணும் நிலையம் என மொத்தம் 24 வாக்கெண்ணும் நிலையங்கள் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குகள் எண்ணும் பணி மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சகல தேர்தல் கடமைகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக