23 செப்டம்பர், 2009

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்




இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள்.
மணமேல்குடி, செப். 22: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய எல்லைக்குள் இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், மீனவர்களின் விசைப் படகுகளைச் சேதப்படுத்தியதுடன், வலைகளையும் கடலுக்குள் அறுத்தெறிந்தனர். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தமிழக மீனவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் மிரட்டி அனுப்பப்பட்டுள்ளனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து 243 விசைப் படகுகளில் திங்கள்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் சல்மான் பாருஸýக்குச் சொந்தமான ஒரு படகு, முஹம்மது ஆரிஃபுக்குச் சொந்தமான ஒரு படகு மற்றும் முஜிபுர் ரஹ்மானுக்குச் சொந்தமான இரு படகுகளில் மீனவர்கள் முருகவேல் (28), வடிவேல் (30), முருகன் (30), அஞ்சப்பன் (28), ஏழுமலை (20), செல்வம் (30), சரவணண் (24), போஸ் (38), கிருஷ்ணன் (48), பெருமாள் (45), முருகன் (28), ஏழுமலை (48) ஆகியோர் அருகருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியை நோக்கி வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து முன்னேறிய அவர்கள் மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள், கயிறு மற்றும் தளவாடப் பொருள்களை வெட்டி கடலுக்குள் வீசி எறிந்தனர். பின்னர், துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை மிரட்டி அனுப்பிவிட்டு தங்கள் படகுகளில் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.கெஞ்சியும் விடவில்லை: இந்தச் சம்பவம் குறித்து மீனவர் போஸ் கூறியது: ""இலங்கைக் கடற்படையினர் சுடத் தொடங்கியதுமே படகுகளை நிறுத்திவிட்டோம். அவர்கள் சூழ்ந்ததும் கைகளை உயர்த்தி நின்றோம். மீனவர்கள் என்று நன்கு அறிந்தும்கூட அவர்கள் எங்களை விடவில்லை. வலைகளை எங்கள் கைகளாலேயே அறுத்தெறியுமாறு கூறினர். வேண்டாம் என்று கெஞ்சினோம். பின்னர், அவர்களே அறுத்தெறிந்தனர்'' என்று கூறினார் போஸ்.ரூ. 2.4 லட்சம் சேதம்: இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியதால், நான்கு படகுகளுக்கும் தலா ரூ. 60 ஆயிரம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகள் நிலை: அமெரிக்கா கவலை





வாஷிங்டன், செப். 22: இலங்கை அகதிகள் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அகதிகள் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அடைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இன்னமும் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். முகாம்களில் மூன்று மாதத்திற்கும் மேலாக அவர்கள் அவதிப்படுகின்றனர். இம்மாத இறுதியில் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அங்குள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் இலங்கையை சர்வதேச சமுதாயம் நிர்பந்தப்படுத்துவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. மேலும் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படுவதோடு, முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து புதிய இடங்களில் குடியமர்த்துவதில் உள்ள பிரச்னைகளும் உள்ளன. இருப்பினும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை இத்தகைய முகாம்களில் தங்க வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே வெகு விரைவாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அனைவரையும் ஒரே சமயத்தில் குடியமர்த்துவது என்பது உடனடியாக இயலாத காரியம். ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இன்னும் பல விஷயங்களை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும், முகாம்களில் உள்ளவர்களை இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கிக்கொள்ள அனுமதிக்கலாம். அல்லது முகாம்களில் தங்க விரும்புவர்களை தங்க அனுமதிக்கலாம். முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, முகாம்களில் சேர்க்கப்பட்ட தினத்திலிருந்தே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. முகாம்களில் தங்கியுள்ளவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று பார்ப்பதில் தவறில்லை. இத்தகைய சோதனை மிகவும் அவசியமானது. ஆனால் முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட காலம் இதே சூழலில் வசிக்கக்கூடாது என்பதுதான் என்றார் பிளேக்.
அன்பான புதியபாதை வாசகர்களே எமது



அன்பான புதியபாதை வாசகர்களே எமது
இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி
இலங்கை தமிழர் பிரச்சினை: பிரதமர் மன்மோகன்சிங்குடன் தி.மு.க.கூட்டணி எம்.பி.க்கள் சந்திப்பு


இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த போரின்போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். அவர்களை சிங்கள அரசு தடுப்பு முகாம்களில் அகதிகள் போல அடைத்து வைத்துள்ளது.

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்த முகாம்களில் ஈழத்தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி கண்ணீரும் கம்பலையுமாக உள்ளனர். சோதனை என்ற பெயரில் முகாம்களில் உள்ள தமிழர்கள் கடத்தி படுகொலை செய்யப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் துன்புறுத்துக் குள்ளாகிறார்கள்.

ஐ.நா.சபையும், உலக நாடுகளும் ஈழத்தமிழர்களை அவரவர் வீட்டுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று பலதடவை இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் கண்ணிவெடிகளை அகற்றிய பிறகு தமிழர்களை திருப்பி அனுப்புவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார்.

தடுப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் நிலை நாளுக்கு நாள் மோசமானதால் உலகத் தமிழர்களிடம் குமுறல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கும் சம்பவம் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை தொடங்கி உள்ளது.

இலங்கை தமிழர்கள் நிலை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்) தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார்கள். டெல்லியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், டி.கே.எஸ்.இளங்கோவன், சுகவனம், வசந்தி ஸ்டாலின், ஹெலன் டேவிட் ஆகியோர் சென்றிருந்தனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்றார்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், சித்தன், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி ஆகியோர் சென்றிருந்தனர். 10.15 மணி முதல் 10.45 மணி வரை சுமார் 30 நிமிடம் பிரதமருடன் தமிழக எம்.பி.க்கள் பேசினார்கள்.

அப்போது முதல்- அமைச்சர் கருணாநிதி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை பிரதமரிடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் போர் முடிந்த பிறகும் ஈழத்தமிழர்கள் தடுப்பு முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலம் தொடங்கும் முன்பு தமிழர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஈழத்தமிழர்களின் உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள உலகத்தமிழர்கள் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். எனவே ஈழத்தமிழர் உண்மை நிலையை அறிய தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அந்த குழு தடுப்பு முகாம்களுக்கு சென்று உண்மையை அறிந்து வரச்செய்ய வேண்டும். இந்த குழு பயணத்துக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு விரைவில் செய்து தர வேண்டும்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்து விட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சிங்கள கடற்படை தாக்குதல்களில் 9 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துவிட்டது. அந்த பகுதியில்தான் நல்ல மீன் வளம் உள்ளது. எனவே தானமாக கொடுத்த கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்ப பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு சார்பில் பல கட்டங்களாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் ஈழத் தமிழர்களின் கைகளில் சென்று சேர்ந்ததா? என்பதை அறிய மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்று தர வேண்டும் என்றும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் 110 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை 250 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும் பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

எம்.பி.க்களின் கோரிக்கைகளை பிரதமர் மன்மோகன்சிங் கவனமாக கேட்டுக்கொண்டார். பிறகு அவர் ஈழத்தமிழர்களுக்கு உதவ எல்லாவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிரதமர் கூறியதாவது:-

ஈழத் தமிழர்களுக்கு உதவும் விஷயத்தில் இந்தியா தரப்பில் உண்மையான, ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுததுள்ளோம்.

எதிர்காலத்திலும் ஈழத் தமிழர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் இந்தியா ஒரு போதும் தயங்காது.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

இதையடுத்து வெளியில் தமிழக எம்.பி.க்கள் பிரதம டம் பேசியது பற்றி நிருபர் களுக்கு பேட்டியளித்தனர்.

பின்னர் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியாவிடம் வற்புறுத்தினார்கள்.
கல்குடா பிரதேசத்தில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது, ஆயுதம் மீட்பு-

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நேற்றையதினம் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும், மகசின் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரு பெண் புலி உறுப்பினர்கள் கைது, ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை-

வவுனியா உக்குலாங்குளம் பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண் புலிஉறுப்பினர்கள் இன்றுபகல் கைதுசெய்யப்பட்டதாகவும், இதன்போது ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உக்குலாங்குளத்தில் இரு புலிகளின் தற்கொலைதாரிகள் மறைந்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பிரதேசம் சுற்றவளைக்கப்பட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரே சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் பிரிகேடியர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட யுவதிகள் இருவரும் வவுனியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததுடன், உக்குலாங்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. கைதான பெண்புலி உறுப்பினர் வழங்கிய தகவலுக்கமைய ஆசிகுளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கிகள் 03, தலா 02 கிலோகிறாம் எடைகொண்ட வெடிமருந்துப் பொதிகள் 03, அதிசக்தி வாய்ந்த டெட்னேற்றர்கள் 03, மைக்ரோ கைத்துப்பாக்கி ரவைகள் 100 என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பெண் புலி உறுப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது : தர்மசிறி லங்கா பேலி



ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இவர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும் ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்த்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் எட்டு ஊடக நிறுவனங்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசாங்கம், இதுவரையில் செயலற்றுக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன் இலங்கையிலுள்ள அச்சு ஊடகங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த அன்றேல் அச்சு ஊடகங்களை நிர்வகிப்பதற்காக, அடக்கியாள்வதற்காகவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இவற்றை எவ்வித மாற்றங்களும் இன்றி, இன்றைய நிலைக்கு இவை பொருத்தமானவைதானா என ஊடக சங்கங்களுடனோ ஊடகவியலாளர்களுடனோ ஆராய்ந்து பார்க்காமலும் எவருடனும் எவ்வித பேச்சுவார்த்தைகளை நடத்தாமலும் மீண்டும் இயங்கு நிலைக்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

பத்திரிகை பேரவையை மீண்டும் இயக்க முயற்சிப்பதற்கு நாம், ஊடக அமைப்புக்கள் என்ற வகையில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இதன்மூலமாக அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த நாட்டிலுள்ள மக்கள், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்குப் பங்கத்தை ஏற்படுத்தவே அரசு முயற்சிக்கின்றது.

இந்த நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக இடம்பெற்ற தாக்குதல்களை நாம் நன்கறிவோம். ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிவோம்; ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் நாம் அறிவோம்.

அண்மையில் போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இன்னமும் அவரால் இரு பாதங்களையும் நிலத்தில் ஊன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தடி உதவியுடன் கூட ஊன்றி நடக்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. போத்தல ஜயந்த இந்த சமூகத்திற்கு இழைத்த அநீதிதான் என்ன என்று நான் கேட்கின்றேன்.

இந்த நாட்டுமக்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமைக்காக குரல் கொடுத்துச் செயற்பட்டமைக்காகவே இவர் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு கூட அரசாங்கம் தவறியுள்ளது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்குக் கூட அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதுபோன்றதே ஊடகவியலாளர்கள் கடத்தப்படும் சம்பவங்களும்.

ஊடக நிறுவனங்களை எரியூட்டுதல் போன்ற எந்தச் சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவினரோ பொலிஸாரோ, இதற்குக் காரணமானாவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் இந்த நாட்டின் எட்டு ஊடக நிறுவனங்களைச் சார்ந்த நாம், இந்த மேடையில் ஒன்றுகூடி, இந்நாட்டு மக்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் உரிமையைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமக்குக் கிடைக்கும் தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது ஊடகவியலளார்களின் கடமை. எனவே அக்கடமையைச் செய்ய ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகளை அகற்றுமாறும், கொடுரத் தாக்குதல்களையும் ஊடக அடக்குமுறையையும் உடனடியாக நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக