9 டிசம்பர், 2009

திருமலையில் இராணுவ மயமாக்கல் இந்துக் கோயில்கள் இடித்து அழிப்பு-இரா.சம்பந்தன்


திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படவேண்டும். வரலாற்றுப் பழைமை வாய்ந்த இந்துக்கோயில்கள் திருமலையில் இடித்து அழிக்கப்படுகின்றன. அதனையும் அரசு நிறுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் அரசிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.


நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களை வற்புறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:திருகோணமலை மாவட்டம் இராணுவ மயமாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அங்குள்ள வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் திட்டமிடப்பட்ட முறையில் இடித்து அழிக்கப்படுகின்றன. மூதூர் சங்குவேலிப் பகுதியில் உள்ள சிவன்கோவிலின் சிவலிங்கம் இடிக்கப்பட்டுள்ளது.பௌத்த நாடு என்ற அடிப்படையில் ஆட்சி பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே இங்கு ஆட்சி நடைபெறுகின்றது. இங்கு மற்ற மதங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.


இச்செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடியே மேற்கொள்ளப்படுகின்றன.திருகோணமலையில் சிங்கள குடியேற்றத்தை நிறுவுவதற்காகவே இவ்வாறு வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்துக் கோயில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன. இராணுவ மயமாக்கலை மேற்கொண்டே இந்த நாசகாரச் செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.


அதி உயர் பாதுகாப்பு வலயமும் சுருக்கப்படல் வேண்டும்.இந்த இராணுவமயமாக்கலை மிக இலகுவாக முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் அரச அதிபர்களாகவும், மாகாண ஆளுநர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். இந்தப்போக்கு முதலில் நிறுத்தப்படவேண்டும். இராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்றார் சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக