20 நவம்பர், 2009

அரசியலமைப்பில் மாற்றம் அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு



நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர் ச்சி உட்பட நாட்டின் முன்னுள்ள ஏனைய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அரசியலமைப்பிலும் நடைமுறை அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தகுதியற்றவர்களின் அரசியல் பிரவேசத்தினால் இலங்கை அரசியலில் தகுதியுடையவர்கள் கூட தகுதியற்றவர்களாகவே தெரிகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுதிய எதிர்கால சவால்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வாறுகாராம விஹாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது. இக்காலப் பகுதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை பொருளாதாரம், சுகாதாரம் உட்பட ஏனைய துறைகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இலங்கை ஏனைய நாடுகளிடையே ஒப்பிடுகையில் பின்தள்ளப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற திட்டக் கொள்கை சரியாக அமைத்து செயற்படுத்தப்படாமையால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, நல்லாட்சிப் போன்றவை சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறினாலும் அந்த நாடுகளின் தேசிய கொள்கைகளில் என்றும் மாற்றம் ஏற்படுவதில்லை.

இவ்வாறானதொரு மாற்றமடையாத தேசியக் கொள்கை ஒன்று இலங்கைக்கு தற்போது தேவை. இலங்கையில் நல்லாட்சியை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை எவ்வாறு அடைவது என்பது தொடர்பாக புதிய கொள்கைகளை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளையே தற்போதைய அவசர தேவையாக கொண்டு பேசப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை அமைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக