2 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றன: கிழக்கு கட்டளைத் தளபதி

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை தேடி கண்டு பிடித்து அவற்றை அழிப்போம் என்று கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு டேத்பா மண்டபத்தில் நடைபெற்ற வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு புறநகர் பகுதி புதூரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட சம்பவமாகும். ஐந்து பேர் ஆயுதங்களுடன் சென்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் கடந்த ஒன்றரை வருடத்தின் பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நடவடிக்கை சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களோடு ஒரு சில அரசியல் வாதிகளுக்கும், சில அரசியல் குழுக்களும் தொடர்பு உள்ளன.

எந்த அரசியல் சக்தியாக இருந்தாலும், அல்லது எந்த அரசியல்வாதியக்ஷிக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உடன் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டின் அரசாங்க படைகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு ஆயுதம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் அவ்வாறு ஒப்படைத்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அவ்வாறில்லாமல் தேடி கண்டு பிடித்தால் உரியவர்களுக்கெதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மட்டக்களப்பில் சில குழுக்களிடத்தில் ஆயுதம் இருப்பது நம்பகமாக எனக்கு தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக சுற்றிவளைப்புகள், திடீர் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் வீதித்தடைகள் என்பன மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.

பொதுமக்கள் இவ் விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரிடமாவது ஆயுதம் இருந்தால் பொதுமக்கள் எமக்கு அறிவிக்க வேண்டும்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

பலவிதமான பயங்கரவாதக் குழுக்கள் இங்கிருந்தன. அவ்வாறான பயங்கர வாதக் குழுக்களை அழித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு இங்கு இடமில்லை. அபிவிருத்திக்கும், சமாதானத்திற்குமே இடமுண்டு.

அபிவிருத்திக்கும், சமாதானத்திற்கும் யாராவது தடையாக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இரண்டு வங்கி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று களுவாஞ்சிக்குடியிலும், மற்றது, புதூரிலுமாகும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரின் அறிவித்தலை கடைப்பிடித்து நடக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக