10 மே, 2011

யாழ் தெல்லிப்பழையில் மீள் குடியேற்றம் மாவை சேனாதிராஜா மற்றும் பசில் ராஜபக்ஷ



இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்ற வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 3511 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் சென்று குடியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. இதற்கான ஆரம்ப வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னர் வலிகாமம் வடக்கு பிரதேசம் அதிதயுயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, இந்தப் பிரதேசத்தின் 36 கிராமசேவகர் பிரிவுகளில் இருந்து 20 ஆயிரத்து 365 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிச் செல்ல நேர்ந்தது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே கீரிமலை வலித்தூண்டல், இளவாலை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 3 கிராம சேவகர் பிரிவுககைளச் சேர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து இப்போது தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள 9 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
நீண்ட காலத்தின் பின்னர் தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் இந்த மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகின்றார்.

இதற்கிடையில் போர்ச்சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ள வடமராட்சி கிழக்குப் பகுதிகளிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்; மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக