2 செப்டம்பர், 2010

இலங்கை மறு குடியமர்வு பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் மறுப்பு





இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.

உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார்.

இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், தற்போது வடக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை நேரில் பார்வையிட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முகாமை பார்வையிட்டார். புதன்கிழமை முல்லைத் தீவில் உள்ள அகதி முகாம்களை அவர் பார்வையிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறுதிக்கட்டத்தில் முல்லைத் தீவு மக்கள் பட்ட துயரங்களை, துன்பங்களை நினைவுகூர்ந்த அவர், அப்படிப்பட்ட துயரத்திலும் நெஞ்சுறுதியோடு இருந்த முல்லைத்தீவு மக்களை அவர் பாராட்டினார். உங்கள் உறுதி இரும்பைப் போன்றது என்று அவர் வர்ணித்தார்.

முல்லைத்தீவில்÷போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து மறு குடியமர்வு செய்து அவர்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர். அப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முல்லைத் தீவு மாவட்ட அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் திரிகோணமலைக்கு சென்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையனைச் சந்தித்தார். அம் மாகாணத்தில் இந்தியா சார்பில் வீடுகளை கட்டிக் கொடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர் என போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். திரிகோணமலைப் பகுதியில் உள்ள திருகோனேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 வலுவான பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார். அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.

ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ நிருபமா சந்திக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக