8 மே, 2010

வடக்கில் பிரதேசந்தோறும் இராணுவ முகாம் : கோத்தபாய ராஜபக்ஷ



பயங்கரவாதத்திடம் இருந்து நிலப்பரப்பை வெற்றிகொண்டது போல் தமிழ் மக்களின் மனங்களையும் வெல்லவேண்டும். மீண்டும் பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்க இடமளிக்காது முப்படைகளின் பங்களிப்புடன் மக்கள் நலன்பேண நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடபகுதி மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கு உள்ளது. எனவே, அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளிடமிருந்து கிளிநொச்சி நகரம் படையினரால் மீட்கப்பட்டதை நினைவுக்கூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் 30 வருடம் நீடித்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு வருடமாகின்றது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டது போன்று தமிழ் மக்களின் மனங்களை வெல்வது எமது பாரிய பொறுப்பாகும்.

முப்படையினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் முக்கிய இடமாக கிளிநொச்சி நகரம் காணப்பட்டது. கிளிநொச்சியை வீழ்த்த முடியாதென புலிகளும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக கூறி வந்தனர்.

ஆனால், எமது படையினர் கிளிநொச்சியை மீட்டது மட்டுமின்றி புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் அவர்களின் உடைமைகள், உயிர்கள் என்பவற்றையும் மீட்டது பாரிய வெற்றியாகும்.

எனவே, வடபகுதி மக்களின் நலன்களை பாதுகாப்பது எமது கடமையாகும். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்காது அப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக