3 ஜனவரி, 2010

வவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து துப்பரவு செய்வது குறித்து பொதுமக்கள், மாணவர்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இது குறித்த பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.




டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கென மாவட்டம் தழுவிய அளவில் செயலணி குழுவொன்று ஆளுனரினால் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த செயலணி குழுவின் தலைவராக டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.




டெங்கு நோயினால் இதுவரையில் வவுனியாவில் 22பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 1100 இக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இதற்கிடையில் வவுனியா பிரதேசத்தில் உள்ள 9 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு, டெங்கு நோய்த்தடுப்பு பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக