9 ஜனவரி, 2010

கெவிலியாமடுவில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் : அரியநேத்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குறித்த கிராமத்தில் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 170 சிங்கள குடும்பங்கள் சட்ட விரோதமாக அரச காணிகளில் குடியேறியிருந்தன.
இக் குடும்பங்கள் தற்போது 230 ஆக அதிகரித்துள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், மேற்படி குடும்பங்களில் 60 குடும்பங்களுக்கு குடியேற்ற அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர், கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளரைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்துள்ள போதிலும் சாதகமான பதில்கள் எட்டவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக