6 டிசம்பர், 2009

இலங்கையில் முகாம்களில் வசிப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் சொந்த ஊர் செல்வர்:அமைச்சர் சமரசிங்கே உறுதி






கொழும்பு:இதுவரை 1.7 லட்சம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் முகாம்களில் வசிக்கும் அனைவரும், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்படுவர்,'' என இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறினார்.இலங்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறியதாவது:

இலங்கையில் பல்வேறு முகாம்களில் வசித்த 1.7 லட்சம் தமிழர்கள், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். மிக குறுகிய காலத்தில் இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 1.12 லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த மாத இறுதிக்குள் மறு குடியமர்த்தப்படுவர்


கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருவதால், குடியமர்த்தும் பணி தாமதமாக நடந்து வருகிறது.முகாம்களில் வசிப்போருக்கு, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இது, அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. 15 நாட்களுக்கு மட்டுமே இந்த சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறு.இவ்வாறு சமரசிங்கே கூறினார்
இலங்கை பொதுத்தேர்தலில் சந்திரிகா மகன் விமுக்தி போட்டி


இலங்கையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே கம்பகா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.

விமுக்தி தற்போது லண்டனில் கால்நடை மருத்துவராக உள்ளார்.
தமிழ் மக்கள் வாக்களிக்கத் தவறினால் வாக்குககள் மோசடி செய்யப்படலாம்: துரைத்தினம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குககள் மோசடி செய்யப்படலாம் அல்லது விரும்பாத ஒருவர் தெரிவாகுவதற்கு உதவியாக அது அமைந்து விடலாம்." என ஈ.பி.ஆர.எல்.எப. பத்மநாபா அணியின் தலைவரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமா இரா.துரைத்தினம் கூறுகின்றார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

" அப்படி வாக்களிப்பதென்றால் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உடன்பாடுள்ளவரை ஆதரிக்கலாம் ."என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

1.வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா ? அல்லது பிரிய வேண்டுமா ? என்பது தொடர்பாக அரசு தீர்மானிக்க முடியாத பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் சர்வ ஜன வாக்கெடுப்பு மூலம் அதனை தீர்மானித்தல் வேண்டும்.

2.தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் .அத்தோடு அரச காணி தொடர்பான நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டும் .

3.அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தப்பட்டு கிழக்கு மாகாண சபை பூரணத்துவமான சபையாக இயங்கும் வகையில் அதிகாரங்களை உடனடியாக வழங்க ஆவன செய்யப்பட வேண்டும் .

4.1982 ஆம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெயர்ந்த சகல மக்களும் அவர்களது விருப்பத்திற்கு அமைய சொந்த கிராமங்களில் மீளக் குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் .

5.வட கிழக்கில் நிர்வாகத்துறையில் இராணுவ மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு வலயம் போன்ற செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும்.

உட்பட பல் வேறு விடயங்களை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளாக குறிப்பிட்டுள்ளதோடு,தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது குறித்து தமிழ் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொழிலாளர் தேசிய சங்கம் இணைவு


ஐக்கிய தேசிய முன்னணியுடன் தொழிலாளர் தேசிய சங்கம் இணைந்து கொண்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் ,இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் பிரஜா உரிமை, தோட்டத்தொழிலாளர்களுக்கான காப்புறுதி திட்டம் ,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் தேசிய சங்கம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக நிலையத்தில் இன்று 11 மணியளவில் இடம்பெற்ற கைச்சாத்திடல் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதி பொதுச்செயலாளர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமார், பிரதிப்பொதுச்செயலாளர் திலக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மன்னார்-மதவாச்சி சோதனைச்சாவடியூடான போக்குவரத்து சேவை ஆரம்பம்


மன்னாரில் இருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தென் பகுதிக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.

வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் தற்போது தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுகின்றது.

இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் மன்னாரிலிருந்து மதவாச்சி சோதனைச்சாவடியூடாக தனியார் பயணிகள் பஸ் ஒன்று தெர்கிற்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்தார்.

சுமார் இரண்டு வருடத்துக்குப் பின் மன்னாரிலிருந்து மதவாச்சியூடாக தென்பகுதிக்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா பிரதிநிதி இன்று இலங்கை விஜயம்


ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும், ஆயுத வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று இலங்கை வரும் இவர் , எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே அவர் இலங்கை செல்கிறார்.

இந்நிலையில் இலங்கை நிலவரம் தொடர்பான, அறிக்கையை அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

அவர் இலங்கையில், இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதுடன், அரசாங்க அதிகாரிகளையும், தன்னார்வு நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் பற்றிக் கமேயற், நெதர்லாந்து கடற்படையில் பணியாற்றிய அதேநேரம், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளின் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் நலன்களில் அக்கறை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளது: சரத் பொன்சேகா


வெற்றியின் பின்னர் இராணுவ வீரர்களின் நலன்கள் குறித்தோ இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார நிலைமை குறித்தோ அரசாங்கம் எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தலைநகர் கொழும்பிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள வெலிசறையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட சம்மேளனக்கூட்டத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா தாம் அரசியலுக்கு பிரவேசிக்க காரணமான விடயங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இம்முறை ஜனாதிபதி தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாக கருத முடியும் எனக்குறிப்பிட்டார்.

குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கும் மக்கள் கருத்துக் கணிப்பாக இந்த தேர்தல் அமையும் என அவர் குறிப்பிட்டார் .

இந்த கூட்டத்தில் உரையாற்றுவோர் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஏஸ்.பி திசாநாயக்கவின் பெயர் உள்ளடக்கடப்பட்டிருந்தபோதிலும் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மாநாட்டின் போது அரசாங்க ஊடகங்களை சேர்ந்த 7 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் குறித்த தாக்குதலுக்கு ஐக்கிய தேசியக்கட்சியே காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச தொலைக்காட்சி சேவைகளான ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றை சேர்ந்த ஊடகவியலாளர்களே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்
ஜனாதிபதித் தேர்தல் குறித்த விசேட கூட்டத்தில் புளொட் முக்கியஸ்தர்
சிவநேசன் (பவன்) விசேட உரை!


ஜனாதிபதித் தேர்தல் குறித்த விசேட கூட்டத்தில் புளொட் முக்கியஸ்தர் சிவநேசன் (பவன்) விசேட உரை! // யாழ்ப்பாணத்தில் இளம் தம்பதியினரின் சடலம் மீட்பு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்டமொன்று வவுனியா நகரசபைகலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. வடக்கின் வசந்தம்
திட்டத்தின் பொறுப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில்
ராஜபக்ச எம்.பி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர்தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள்,

வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள்,கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்)) வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், புளொட் மத்தியகுழுஉறுப்பினருமான க.சிவநேசன் (பவன்) அவர்கள்,

கடந்தகால ஆட்சி கால நிகழ்வுகளைஉற்று நோக்கும்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்தவந்ததலைவர்களில் அநேகமானவர்கள் தமது ஆட்சியின் இரண்டாவது காலப்பகுதியில் தான்இனப்பிரச்சினை தீர்வைப்பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். இருஆட்சி காலங்களுக்கு மேல் ஜனாதிபதி ஒருவர் இருக்கமுடியாதென்பதே இதற்குக்காரணமாகவிருந்தது. இந்த வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றைநிச்சயமாக வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளதுடன்,

அவர் இடம்பெயர்ந்தமக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றையும்உறுதியளித்தபடி மேற்கொண்டு வருகின்றார். எனவே மகிந்த ராஜபக்ச அவர்கள்தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் தமிழ்மக்களின் பிரச்சினைக்கானஒரு சரியான தீர்வினை முன்வைப்பாரென நம்ப இடமுண்டு. இதனடிப்படையில் எமதுகட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஆகவே அவர் மேற்கொண்டு வரும்


மீள்குடியேற்றம், அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்களை தொடர்ந்தும்
முன்னெடுப்பதற்கும், தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வினைமுன்வைப்பதற்கும் ஏதுவாக இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மக்கள்தமது ஆதரவினை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.மேற்படி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான புளொட் ஆதரவாளர்களும்பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Saturday, December 5, 2009

மன்னார் கோட்டை சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன: பசில் ராஜபக்ஷ


கோட்டை சோதனைச் சாவடியில் கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டம் இன்று சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உறுதிமொழியினை அவர் வழங்கியுள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் அப்பகுதிக்கு வருகை தரும் மக்களும் பிரதேசவாசிகளும் சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் வடமேல் மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், " நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீள்குடியேற்றப் பணிகளும் துரிதகதியில் நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டதுடன் எதிர்காலத்தில் மன்னார் மாவட்ட மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அந்நிகழ்வின் பின்னர் முக்கியஸ்தர்கள் அனைவரும் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்
சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்: வாழைச்சேனையில் தீவிர விசாரணை


படகில் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழுவைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடாத்தி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரான் கடலோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிலும் மற்றுமொருவர் முதலைக் கடியிலும் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த கடலோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் வள்ளமொன்றுக்கு அருகில் சிலர் காணப்பட்டதாகவும் இராணுவத்தினரைக் கண்டு தப்பியோட முற்பட்ட வேளை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சட்டவிரோத வெளிநாட்டு பயணமொன்றின் நிமித்தம் இவர்கள் ஆயத்தமாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

சிலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கே.கணேசன் (32 வயது) என்பவர் தப்பியோட முயன்ற சமயம் நீரோடையொன்றில் விழுந்து முதலைக் கடிக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்த இரண்டாவது நபர் பாக்கியராசா ரமணன் (27 வயது) எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதையும் உயிரிழந்தவரின் தாயார் கதறி அழுவதையும், காயத்துக்கு உள்ளானவரையும் படங்களில் காணலாம்.

முகாமிலிருந்து சென்றோர் 22,443 பேர்; மீளத் திரும்பியோர் 9142 பேர் மட்டுமே : அமைச்சர் சமரசிங்க
நலன்புரி முகாம் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் 22 ஆயிரத்து 443 பேர் முகாமிலிருந்து வெளியில் சென்றிருப்பதாகவும் இவர்களில் 9142 பேர் மட்டுமே திரும்பவும் முகாம்களுக்கு வந்திருப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"வெளியேறிச் செல்லும் மக்களுக்கு நாம் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. வராதவர்களைத் தேடிப் பாதுகாப்புத் தரப்பினர் செல்ல மாட்டார்கள். அவர்கள் விரும்பியபோது மீண்டும் வரலாம்.

மக்களுக்குச் சுதந்திரமான நடமாட்டத்தினை வழங்கியதன் மூலம் சொல்வதைச் செய்யும் அரசாங்கம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம். எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் அனைத்து மக்களையும் மீள் குடியேற்ற எதிர்பார்க்கிறோம்" என்றார்.


தொழிற்சங்கங்களுக்கு
அரசு பதிலளித்த விதம் எனக்குத் தெரியும் : பொன்சேகா


அரச ஊழியர்கள் தமது கோரிக்கைகளுக்காகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தபோது நடைமுறை அரசாங்கம் அவர்களுக்கு பதிலளித்த விதத்தை தான் நன்கறிவதாகவும் தனது தலைமையிலான அரசாங்கம் அமையும் போது தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் ஏற்புடைய இடத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று பிட்டகோட்டேயில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஜனநாயகத்தை இல்லாமல் செய்து, குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். யுத்த வெற்றியை சொல்லிக் கொண்டு முறைசாராத பலத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


ரொபேர்ட் பிளேக் செவ்வாயன்றுவருகை இலங்கை


இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும், அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சருமான ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

உதவி வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரொபேர்ட் ஒ பிளேக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களை பிளேக் சந்திக்கவுள்ளார்.


ஆதரவாளர்களை அநாதையாக்காமல் யானை சின்னத்தில் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும்



வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதன் மூலம் கட்சியின் ஆதரவாளர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர் . .

ஆதாரவாளர்களை அநாதையாக்காமல் ஜனாதிபதி தேர்தலில் கட்சி வேட்பாளரை நிறுத்தி யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கவேண்டும். அதற்கு இன்னும் அவகாசம் இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்..

நான் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் , கட்சிக்கு ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் அரசியலிருந்து வீட்டுக்கு செல்வதா? ஓய்வெடுப்பதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியுடன் நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். .

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, .

அரசாங்கம் தேர்தலொன்றை நடத்துவதற்கு தயாராகிவருவதனால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாமும் தயாராகவேண்டும் என்று கட்சியின் தலைவரிடம் கேட்டுக்கொண்டோம் . அவரை பல தடவைகள் கௌரவமாக பாதுகாத்தோம். அவருக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு சூழ்ச்சி செய்யப்பட்டது அன்றிலிருந்தே நாம் பாதுகாத்தோம்..

பிரதி தலைவர் கரு ஜயசூரிய அரசாங்கத்துடன் இணையும் போது தலைவரே நாமே பாதுகாத்தோம். கட்சிக்குள் காணப்படுகின்ற குறைப்பாடுகளை சுட்டிக்காட்டினோம் அதற்கு தீர்வு காணமுடியாவிடின் தலைமைப்பதவியிலிருந்த விலகி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினோம். கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் வாதாடினோம். அப்போதெல்லாம் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் பிரகாமே முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர். சார்பான ஊடகங்களின் மூலமாக எங்களுக்கு சேறுபூசினர். கட்சிக்குள் காணப்படுகின்ற குறைப்பாடுகளை கண்டறிந்து கட்சியின் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்தமையினால் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எங்களை ஊடகங்களுக்கு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. அமைப்பாளர்கள் இன்றியே மாகாண சபைத்தேர்தல்களுக்கு முகம்கொடுத்தோம். அத்தருணத்தில் கருஜயசூரியவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு தனது தலைமைத்துவத்தை காத்துக்கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அமைப்பாளர்கள் நியமிக்கப்படவே இல்லை. ஜனநாயகத்தை பற்றியே குரல் எழுப்பப்படுகின்றது. எனினும் கட்சியின் செயற்குழுவிற்குள் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிக்குமாறு கோரினோம் அதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கட்சியையும் யானை சின்னத்தையும் மாற்றவேண்டாம் என்று கோரினோம். .

தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சியின் பெயர் விற்கப்பட்டு விட்டது. தேர்தலில் ரணில் முன்வந்தால் தோல்வியடைவார் என்று தெரியும். அதனால் தான் எஸ்.பி போட்டியிடுவதற்கு தயராக இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்கு கட்சிக்குள் பலர் இருக்கின்றனர். ஆசிய ஜனநாயக குழுவின் தலைவரும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாக கூறுகின்றவரிடம் ஜனநாயகம் இல்லை. கட்சி ஆதரவாளர்களை கண்ணை கட்டி காட்டுக்குள் தள்ளிவிட்டுள்ளனர். கனவுலோகத்திலிருந்து வெளியே வரவேண்டும் அப்போது தான் அநாதையாக்கப்பட்டுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க முடியும். .

ஐக்கிய தேசியக்கட்சியினரே அச்சுறுத்தி செயற்குழுவினரை பயமுறுத்தி தீர்மானங்களை எடுக்காமல் ஜனாதிபதி தேர்தலில் கட்சி வேட்பாளர், கட்சி சின்னத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் விரைவில் தீர்மானமொன்று எட்டப்படும். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவிலயாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், .

கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் அரசியலிருந்து வீட்டுக்கு போவதா? ஓய்வு பெறுவதா? அல்லது அரசாங்கத்துடன் இணைவதா? என்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும். அரசாங்கத்தில் பதவிகளை ஏற்பதாயின் பலர் செல்வதற்கு முன்னரே நான் பதவியேற்றிருப்பேன் என்றார். .

அசாத் சாலி கருத்து .

ஊடகவிலயாளர் மாநாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதை இட்டு நான் சந்தோஷமடைகின்றேன் அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது சிங்கள நாடு, பௌத்த சிங்களவர்களுக்கே உரித்துடையது. சிறுபான்மையினர் எதனையும் கேட்கமுடியாது அவர்கள் வெளியிலிருந்து இங்குவந்தவர்கள் என்று கூறியிருந்தார்..

அவரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்திலிருக்கு அமைச்சர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் அல்லது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன் அது நடைபெறவில்லை..

இதனையடுத்தே 12 கட்சிகளை இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு நான் தலைமையேற்றேன். கடந்த தேர்தல்களில் யானை சின்னத்திற்கு சிறுபான்மையினர் கண்ணை மூடிக்கொண்டு புள்ளடியிட்டனர் ஆனால் இன்று யானை சின்னமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, கட்சியின் தலைவரோ தேர்தலில் இல்லை. .

இது வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயமாகும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் நாம் அவருக்கு பின்னால் சென்றோம் கட்சிக்கு சிறுப்பான்மை இனத்திற்கு இடமில்லை என்பதுடன் தொடர்ச்சியாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி முக்கிய விடயங்களை வெளிப்படுத்துவோம் என்றார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் இன்று பயணம்


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை இன்று ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

அரசாங்க ஆசிரியர் இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு பணிப்பு



அரசாங்கப் பாடசாலைகளில் தற்காலிக இடம் மாற்றப்பட்டுள்ள சகல ஆசிரியர்களின் இடமாற்றங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.என்.டி.பண்டார சகல மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களையும் பணித்துள்ளார்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலை ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றம் பெறுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பான சுற்றிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இருப்பினும் பிள்ளைப்பேறு காரணமாக மட்டும் ஒருவர் தற்காலிக இடமாற்றம் பெறமுடியும். ஆனால் 3 மாதம் மட்டுமே அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Friday, December 4, 2009

வடக்கு மாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோதனையில் கண்டுபிடிப்பு


உள்நாட்டுப்போர் முடிந்து ஆறுமாதங்களான நிலையில், அதன் பன்முக பாதிப்புக்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

போரின் போது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த வடக்கின் இளவயது மாணவர்கள் பலருக்கு, அவர்களின் உடலிலிருந்து அவை இன்னமும் அகற்றப்படாமலிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

வழமையான காச நோய் சோதனையின் போது சில மாணவர்கள் தமது உடலில் துப்பாக்கி ரவைகள் இருப்பதாகக் கூறினர். உடனே அவர்களை எக்ஸ்ரே மூலம் சோதித்ததில் இது உண்மையெனத் தெரியவந்துள்ளது.

இப்பிரச்சினையைக் கண்டறிந்த யாழ். மாவட்ட காசநோய் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ். ஜமுனானந்தா மேற்கண்ட தகவலைத் தெரிவித்ததாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை 13 மாணவர்கள் உடலில் ரவைகளும், குண்டு வெடிப்புத் துகள்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அறுவைச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பலரின் உடலில் இது போன்ற துகள்களும், ரவைகளும் இருக்க வாய்ப்பு இருப்பதால், இது போன்ற பாதிப்புக்குள்ளான மக்கள், மருத்துவ சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் எஸ் ஜமுனானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிய கொள்ளையரிடமிருந்து 7 இலங்கையர் விடுவிப்பு



சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம்.வீ. சார்ளி எனப்படும் கப்பலில் கடமையாற்றிய இலங்கையர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டனர்.

நியூசிலாந்துக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர்கள் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற் கொள்ளையர்களுக்கும், நியூசிலாந்து கப்பல் நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இலங்கையர் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலிய கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக