2 நவம்பர், 2009

இடம்பெயர்ந்த சகலரும் 2010ஆம் ஆண்டு ஜனவரிக்குள் மீள் குடியமர்த்தப்படுவர்- ஜனாதிபதி பல்கேரிய ஜனாதிபதியிடம் தெரிவிப்பு



இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். இடம்பெயர்ந்த சகலரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனொவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பயங்கரவாதத்தை ஒழித்ததுடன் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத் தக்கதாகும் என்று தெரிவித்துள்ள பல்கேரிய ஜனாதிபதி இன மற்றும் மத ரீதியில் மக்களை ஐக்கியப்படுத்தி இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாத்து ஜனநாயகத்திற்குள் பிரவேசிக்கும் வரையில் மனித உரிமைகளை பாதுகாத்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என நான் நம்புகின்றேன் என்றார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையில் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளை மேம்படுத்தல் தொடர்பில் அரசியல் மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;

முன்னதாக 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருந்தனர். அந்த தொகை தற்போது 1 இலட்சத்து 60 ஆயிரமாக இருக்கின்றது . மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்த சகலரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார். இந்த சந்திப்பிற்கு பின்னர் பல்கேரிய அரச வர்த்தக கைத்தொழில் சபைக்கும் இலங்கை வர்த்தக கைத்தொழில் சபைக்கும் இடையில் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

கூட்டறிக்கை இதேவேளை, இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அரசியல் பேச்சுக்களை நடத்துவதற்கும் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக இரு தலைவர்களும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். ஐக்கியநாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களிலிருந்தும் இரு தர்ப்பினரும் பூரண ஒத்துழைப்பை பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்ததை அடுத்து நாட்டில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் புனர்நிர்மாண பணிகள் பற்றியும் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் ஜனாதிபதி எடுத்துக் கூறினார். இடம் பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பது, இலங்கை இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பேணுவது உட்பட சகல, இன, சமுதாய பங்களிப்புடன் ஜனாதிபதியின் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக