18 அக்டோபர், 2009

கனடாவுக்குள் கப்பல் மூலம் பிரவேசிப்பதற்கு முயற்சித்த 76 இலங்கையர்கள் கைது


இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த "ஓசன் லேடி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார்.

எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

கனடிய பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலில் இருந்தவர்கள் மேலே பறந்து சென்ற ஹெலிகொப்டர் ஒன்றை பார்த்து கைகளை அசைத்ததை காணக் கூடியதாக இருந்தது என்றும் சிவில் உடைகளுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் சேர்ட் அணியாமல் நின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக