22 செப்டம்பர், 2009

வவுனியாவில் பெண் தற்கொலைதாரி ஒருவர் சந்தேகத்தில்


பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது தற்கொலைதாரி எனச் சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகளின்போது இந்தப் பெண் வழங்கிய தகவலையடுத்து தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 3 அங்கிகளும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பகுதி ஒன்றில் இவை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொரு இளம் பெண் சைனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கலாம் எனப் பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக