12 ஜூலை, 2011

தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.

"இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

"கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.

ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை. இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவ வீரர்களால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது.

எனவே சட்டவிரோதமாக வெளியில் உள்ள இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். உள்நாட்டில் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவர்களை விரைவில் கைது செய்து இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக