11 அக்டோபர், 2010

யாழ். சென்றுள்ள சிங்கள மக்கள் தொடர்பில் எதனையும் செய்ய முடியாது:அமைச்சர் மில்ரோய்

தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி சுமார் 300 சிங்கள மக்கள் உரிய தரப்பினருக்கு எந்த அறிவிப்பையும் செய்யாமலும் எந்தவிதமான முறைமையையும் பின்பற்றாமலும் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.

இவ்வாறு எந்தவிதமான நடைமுறையையும் பின்பற்றாமல் அவர்கள் அங்கு சென்றால் எதனையும் செய்ய முடியாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் என்னிடமோ அமைச்சின் அதிகாரிகளிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடமோ கலந்துரையாடவில்லை. எனவே அவர்கள் வந்து என்னுடன் அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடம் பேசவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி சுமார் 300 சிங்கள மக்கள் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் என்னிடமோ அல்லது அமைச்சின் அதிகாரிகளிடமோ அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடமோ கலந்தாலோசிக்காமலும் அறிவிக்காமலுமே சுமார் 300 சிங்கள மக்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றக்கோரி நிற்கின்றனர்.

இவ்வாறு எவ்விதமான நடைமுறையையும் பின்பற்றாமல் யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்கு போனால் நான் என்ன செய்ய முடியும்? எதற்கும் ஒரு நடைமுறை இருக்கின்றது. அதனை பின்பற்றவேண்டும்.

என்னிடம் அல்லது அமைச்சு அதிகாரிகளிடம் அல்லது வடக்கு மாகாண ஆளுநரிடம் அறிவித்திருந்தால் நாங்கள் அதற்குரிய நடவடிக்கைளை எடுத்திருப்போம். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள், ஆகியோரை தொடர்புகொண்டு விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். அதனைவிடுத்து திடீரென அங்கு சென்றால் மீள்குடியேற்ற அமைச்சினால் என்ன செய்ய முடியும்? எனவே அவர்கள் என்னுடனோ அல்லது வடக்கு மாகாண ஆளுநருடனோ பேச்சு நடத்தவேண்டும். அதன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக